ரூ.50 கோடிக்கு மேல் வங்கிகளில் கடன் வாங்கினால் பாஸ்போர்ட் விவரங்கள் கட்டாயம்.. மத்திய அரசு அதிரடி!
50 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்குபவர்களின் பாஸ்போர்ட் விவரங்களை பெற பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: 50 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்குபவர்களின் பாஸ்போர்ட் விவரங்களை பெற பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதை தடுக்கும்வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்ற பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி, ஜதின் மேத்தா ஆகியோர் கடனை திருப்பி செலுத்தாமல் அடுத்தடுத்து வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டனர்.
இதனால் வங்கிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெரும் தொகையை வாங்கும் நபர்களின் பாஸ்போர்ட் விவரங்களை பெறாததால் கடன் பெற்று தப்பிச் செல்வதை தடுக்க முடியாமல் போயிவிடுவதாக கூறப்படுகிறது.

பாஸ்போர்ட் விவரங்கள்
இதற்கு முடிவு கட்டும்வகையில், பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் 50 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்ற அனைவரது பாஸ்போர்ட் விவரங்களையும் 45 நாட்களுக்குள் கேட்டுப்பெற வேண்டும் என்றும், அவர்களிடம் பாஸ்போர்ட் இல்லாவிட்டால், அதனை சமமான சான்றிதழை கேட்டுப்பெற வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தடுக்க முடியும்
பாஸ்போர்ட் விவரங்களை குறிப்பிடுவதற்காக, கடன் விண்ணப்ப படிவத்தில் அதற்கென பிரத்யேக பகுதியை அச்சிட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாஸ்போர்ட் விவரங்களை பெற்றால்தான் கடனாளிகள் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க முடியும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த வாரம் பறிமுதல்
வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு, திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து விற்பதற்கான மசோதாவுக்கு கடந்த வாரம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பொதுத்துறை வங்கிகளுக்கு
மேலும், 50 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள வாராக்கடன்களை ஆய்வு செய்யுமாறும், அதில் மோசடி இருப்பது தெரிய வந்தால், சிபிஐயிடம் புகார் கூறுமாறும் பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications