நல்லெண்ண அடிப்படையில் நிதியுதவி வழங்கினால் மத்திய அரசு ஏற்க வேண்டும்.. பினராயி விஜயன் கோரிக்கை
பேரிடர் காலங்களில் வெளிநாடுகளின் நிதியை மத்திய அரசு ஏற்கலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்: பேரிடர் காலங்களில் வெளிநாடுகளின் நிதியை மத்திய அரசு ஏற்கலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கனமழை மற்றும் வெள்ளத்தால் கேரள மாநிலம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளது. 400 பேர் வரை பலியாகியுள்ளனர்.
லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக அங்கு மழை குறைந்துள்ளதால் தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.
ரூ.700 கோடி உதவி
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளும் நிதியுதவி அளித்து வருகின்றன. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் நாடு ரூ.700 கோடி நிவாரண நிதி வழங்க தயார் என்று அறிவித்துள்ளது.
கொள்கை முடிவு
ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட வெளிநாடுகளின் நிதி உதவியை இந்தியா ஏற்காது என்று தெரிய வந்துள்ளது.
வெளிநாட்டு நிதி உதவிகளை ஏற்பது இல்லை என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா கொள்கை முடிவு எடுத்து இருப்பதால் அதை பின்பற்ற மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு ஏற்கலாம்
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "2016 பேரிடர் மேலாண்மை கொள்கையின் படி, பேரிடர் காலங்களில் வெளிநாடுகள் அளிக்கும் உதவியை மத்திய அரசு ஏற்கலாம்.
பொறுத்திருந்து பார்ப்போம்
ஐக்கிய அரபு அமீரக நிதியுதவி விவகாரத்தில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி தெரிவிக்கும் விழா
கேரளாவில் மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்ட முப்படை வீரர்களுக்கு வரும் 26-ம் தேதி நன்றி தெரிவிக்கும் விழா நடைபெறும்" என்று கூறியுள்ளார்.