ஓகி புயல் பாதிப்பை பார்வையிட மத்தியக்குழு 26ம் தேதி தமிழகம் வருகிறது!
ஓகி புயல் பாதிப்பை பார்வையிடுவதற்காக மத்தியக்குழு டிசம்பர் 26ம் தேதி தமிழகம் வருகிறது.
டெல்லி: ஓகி புயல் பாதிப்பை பார்வையிடுவதற்காக மத்தியக்குழு டிசம்பர் 26ம் தேதி தமிழகம் வருகிறது. குமரி உள்ளிட்ட புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை இந்த குழு பார்வையிடும்.
ஓகி பாதிப்பு பற்றி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தமிழக அரசு சார்பில் அறிக்கை சமர்பிக்க சென்ற தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் "தமிழ்நாட்டின் தற்காலிக சீரமைப்புக்காக ரூ.401 கோடி தர வேண்டும்'' என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருப்பதாக கூறியுள்ளார்.
அவர் தனது பேட்டியில் " புயல் பாதிப்புகளை நிரந்தரமாக சீரமைக்க ரூ.8,426 கோடி நிதியுதவி கோரப்பட்டுள்ளது. ஓகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டு இருக்கிறது'' என்று கூறினார்.
மேலும் ''புயல் பாதிப்பு, மழை பாதிப்பைச் சீர்செய்ய நிதி அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரியுள்ளோம்'' என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
முன்னதாக தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார் ஓகி புயல் சேதம் பற்றிய அறிக்கையை ராஜ்நாத் சிங்கிடம் அளித்தனர். இதில் விவசாய நிலங்கள், மின் கட்டமைப்பு , மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அறிக்கையாக அளித்துள்ளனர்.