விகே பாண்டியனின் மனைவி.. மூத்த ஐஏஎஸ் அதிகாரி சுஜாதா வி.ஆர்.எஸ் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு!
டெல்லி: ஒடிசா மாநில முதல்வருக்கு நெருக்கமானவரான பிஜு ஜனதா தளம் தலைவர் வி.கே. பாண்டியனின் மனைவியும், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சுஜாதா கார்த்திகேயன் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த நிலையில், அவரது விருப்ப ஓய்வு முடிவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன். ஒடிசா முன்னாள் முதல்வரான நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவராக இருந்தார். நவீன் பட்நாயக்கின் வலது கரமாகவே ஆட்சி நிர்வாகத்தில் திகழ்ந்த விகே பாண்டியன், கடந்த 2023 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.

விகே பாண்டியன்
ஒடிசா அரசியலில் களமிறங்கி, நவீன் பட்நாயக்கிற்கு துணையாக மாநில முழுவதும் ஹெலிகாப்டரில் சென்று தேர்தல் பிரசாரம் செய்தார். நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு விகே பாண்டியன் என்றும் கூறப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த ஒடிசா சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் விகே பாண்டியன் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.
ஒடிசா மாநிலத்தில் 2024ல் நாடாளுமன்றத் தேர்தலோடு நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதல்வராக இருந்துவந்த நவீன் பட்நாயக், தன் பதவியை ராஜினாமா செய்தார்.
ஒடிசா தேர்தல் தோல்வி
இந்தத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் மூளையாக செயல்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான வி.கே.பாண்டியன், தேர்தல் தோல்விக்குப் பிறகு பொதுவெளிக்கு வரவே இல்லை. அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் அறிவித்தார். அவர் டெல்லியில் செட்டில் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, விகே பாண்டியனின் மனைவியும் ஒடிசா மாநிலத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா கார்த்திகேயன் விடுப்பில் சென்றார். சுஜாதா கார்த்திகேயன், ஒடிசாவை சேர்ந்தவர். ஐஏஎஸ் அதிகாரியான இவரும், விகே பாண்டியனும் பயிற்சி காலத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
சுஜாதா கார்த்திகேயன் ஐஏஎஸ்
சுஜாதா கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், ஒடிசா அரசின் மிக முக்கிய துறையான மிஷன் சக்தி துறையில் பணியாற்றி வந்தார். அவர் தேர்தலுக்கு முன்னதாக பிஜு ஜனதா தளத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் அக்கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் கடன் தரப்படமாட்டாது என்று மகளிர் சுய உதவிக் குழுக்களை மிரட்டுவதாகவும் பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு மே 2-ஆம் தேதி சுஜாதாவை பொதுமக்கள் சாராத துறைக்கு மாற்றியது. இதற்கிடையே 10 ஆம் வகுப்பு தேர்வெழுதப் போகும் தன் மகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறி 6 மாத விடுப்பில் சென்றார் சுஜாதா கார்த்திகேயன். பின்னர் மேலும் விடுப்பை நீட்டிக்கக் கோரி விண்ண்ப்பம் செய்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஒடிசா பாஜக அரசு நிராகரித்ததால் மீண்டும் கடந்த ஆண்டு இறுதியில் பணியில் சேர்ந்தார்.
சுஜாதா ஐஏஎஸ் விருப்ப ஓய்வு
இந்நிலையில் சுஜாதா கார்த்திகேயன் விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்துள்ளார். 15 நாட்களுக்கு முன், அவர் தனது விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை மத்திய அரசிடம் சமர்ப்பித்த நிலையில், மத்திய அரசு அவரது கோரிக்கையை அங்கீகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது வி.ஆர்.எஸ் முடிவை அங்கீகரித்து உரிய அறிவிப்பை வெளியிடுமாறு ஒடிசா அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications