டுபாக்கூர் பல்கலைக்கழகங்கள்... அமெரிக்கா கிளம்பிய 19 மாணவர்களை தடுத்து நிறுத்திய மத்திய அரசு!
ஹைதராபாத்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இரண்டு பல்கலைக்கழகங்களில் சேருவதற்காக கிளம்பிய 19 மாணவ மாணவியரை அமெரிக்க அரசின் உத்தரவின் பேரில் மத்திய அரசு தடுத்து நிறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இரண்டு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்காக கடந்த ஞாயிறன்று ஹைதராபாத்திலிருந்து 19 மாணவர்கள் அங்கு கிளம்பினர்.
ஆனால், அந்த மாணவர்கள் சேரவுள்ள பல்கலைக்கழகங்கள் மீது புகார்கள் வந்துள்ளதாகவும், அதனால் அங்கு சேருவது ரிஸ்க்கானது என்பதாலும் யாரும் இங்கு வர வேண்டாம் என்று மத்திய அரசுக்கு அமெரிக்க அரசிடமிருந்து தகவல் வந்தது. இதையடுத்து அம்மாணவர்களை விமானத்திலிருந்து கீழே இறக்கி விட்டனர் அதிகாரிகள்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த இந்த இரண்டு பல்கலைக்கழகங்களும் "டுபாக்கூர்" கல்வி நிலையங்களாம். இவற்றுக்கென முறையான கட்டடங்கள் கூட இல்லை என்கிறார்கள். எனவே இதில் சேருவதைத் தவிர்க்குமாறு மத்திய வெளியுறவு அமைச்சகமும் இந்திய மாணவ, மாணவியரை அறிவுறுபத்தியுள்ளது.
பிரச்சினை சரியாகும் வரை இந்த பல்கலைக்கழகங்களில் சேருவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்ட 19 பேரும் ஏர் இந்தியா விமானம் மூலம் சான்பிரான்சிஸ்கோ சென்று அங்கிருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள சிலிக்கான் வேலி பல்கலைக்கழகம் (சான்ஜோஸ்) மற்றும் நார்த் வெஸ்டர்ன் பாலிடெக்னிக்கில் (ப்ரீமான்ட்) சேரவிருந்தனர்.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அரசுடன் பேசப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்தப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்காக சென்ற 14 பேர் ஏற்கனவே இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது மேலும் 19 பேரின் அட்மிஷன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications