டெல்லியை எதிர்நோக்கி காத்திருக்கும் டெல்டா விவசாயிகள்... 28ல் காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம்
பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் இருந்து நீர் திறந்துவிடவே முடியாது என்று கர்நாடகா அடம்பிடிக்கும் நிலையிலும் சம்பா சாகுபடி காப்பாற்றப்படுமா என தமிழக டெல்டா விவசாயிகள் தவிக்கும் நிலையிலும் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் வரும் 28-ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. ஆகஸ்ட் 9-ம் தேதிதான் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

எனினும் கர்நாடகத்தில் இருந்து போதிய அளவில் நீர்வரத்து இல்லாததால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. 120 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 68 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதுவும் அதிகபட்சம் 3 வாரங்களுக்கு மட்டுமே வரும்.
இதனால் சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். ஆனால் மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுவதால் காவிரி நீர் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடகம் திட்டவட்டமாக கூறி வருகிறது.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் வரும் 28-ந் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் செய்துள்ளது.
தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநில தலைமைச் செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இக்கூட்டம் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பட்டீல், காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் வருகிற 28-ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் கர்நாடகத்தில் உள்ள காவிரி நதி அணைகளின் நீர்மட்டம் குறித்து எடுத்துக் கூறப்படும்.
2012-13-ம் ஆண்டு உச்சநீதிமன்றம்தான் வறட்சி காலங்களில் இடர்ப்பாட்டு நீர் பங்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடகம் முடிவு செய்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications