தமிழக ஆளுநர் ரோசய்யா உட்பட 7 மாநில ஆளுநர்கள் மாற்றம்?
டெல்லி: தமிழக ஆளுநர் ரோசய்யா உட்பட 7 மாநிலங்களின் ஆளுநர்கள் விரைவில் மாற்றப்படலாம் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பாஜக கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது.
இதற்காகவே அம்மாநில ஆளுநரை மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி மாநிலத்துக்கு முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பெடியை புதிய ஆளுநராக அறிவித்தது மத்திய அரசு.
ஆனந்திபென் படேல்
இதேபோல் வேறு சில மாநில ஆளுநர்களை மாற்றுவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் முதல்வர் அனந்திபென் படேலை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதனால் அனந்திபென் படேலை பஞ்சாப் மாநில ஆளுநராக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது பஞ்சாப் மாநில ஆளுநர் பொறுப்பை ஹரியானா மாநில ஆளுநர் கப்தன்சிங் சோலங்கி கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். ஆகையால் அனந்தி பென் படேல் பஞ்சாபின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்படலாம்.
கல்யாண்சிங்
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான கல்யாண்சிங் ராஜஸ்தான் மாநில ஆளுநராக உள்ளார். அவர் உ.பி. அல்லது வடகிழக்கு மாநிலம் ஒன்றுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கேகே பால்
உத்தரகாண்ட் மாநில ஆளுநர் கே.கே.பால், ராஜஸ்தான் மாநிலத்துக்கும் டெல்லி மாநில முன்னாள் போலீஸ் அதிகாரி பி.எஸ்.பாசி உத்தரகாண்ட் மாநிலத்துக்கும் ஆளுநராக்கப்படலாம்.
சோலி சொராப்ஜி
மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரலான சோலி சோரப்ஜியையும் ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆளுநராக நியமிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் சோரப்ஜியை கர்நாடக ஆளுநராக நியமிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் சோரப்ஜி அப்போது ஆளுநர் பதவியை ஏற்க விரும்பவில்லை. தற்போது அவர் ஆளுநர் பதவி ஏற்க சம்மதித்துள்ளார். எனவே ஏதாவது ஒரு மாநிலத்துக்கு அவர் ஆளுநராக வாய்ப்புள்ளது.
ரோசய்யா
தமிழக ஆளுநர் ரோசய்யா கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி பதவி ஏற்றார். ரோசய்யாவின் 5 ஆண்டு பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது. ஆகையால் ரோசய்யாவுக்கு பதில் புதிய ஆளுநராக வேறு யாராவது நியமனம் செய்யப்படுவாரா? அல்லது ரோசய்யாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.