மத்திய அரசின் அதிதீவிர கண்காணிப்பில் "சின்ன சின்னம்மா" உட்பட மன்னார்குடி கோஷ்டியின் 6 பேர்!
தமிழக அரசின் நடவடிக்கைகளில் மன்னார்குடி கோஷ்டி தலையிடுகிறதா? என்பதை மத்திய அரசு அதிதீவிரமாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
டெல்லி: மத்திய அரசின் அதிதீவிர கண்காணிப்பில் 'சின்ன சின்னம்மா' என அழைக்கப்படும் இளவரசி உட்பட மன்னார்குடி கோஷ்டியின் 6 பேர் இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்ற சசிகலா தலைமையிலான மன்னார்குடி கோஷ்டி முயற்சித்தது. ஆனால் தொடக்கம் முதலே மன்னார்குடி கோஷ்டியின் கை ஓங்குவதை தடுத்து வருகிறது மத்திய அரசு.

முதல்வராக மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை கொண்டுவர முதலில் முயற்சித்தார் சசிகலா. பின்னர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க மன்னார்குடி கோஷ்டி முயற்சித்தது. இதை மத்திய அரசு தடுத்து ஓ. பன்னீர்செல்வத்தையே முதல்வராக்கியது.
தற்போதும் அதிமுகவையும் ஆட்சியையும் எப்படியாவது கபளீகரம் செய்வது என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது மன்னார்குடி கோஷ்டி. ஆனால் அப்படி எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு அதிதீவிரமாக இருந்து வருகிறது.
குறிப்பாக தமிழக அரசின் நடவடிக்கைகளில் மன்னார்குடி கோஷ்டியின் தலையீட்டை தடுத்து நிறுத்துவதில் மத்திய அரசு முனைப்பாக இருக்கிறது. தற்போது மன்னார்குடி கோஷ்டியின் எம். நடராஜன், திவாகரன், டிடிவி தினகரன், வெங்கடேஷ், சிவகுமார் மற்றும் சின்ன சின்னம்மா என அழைக்கப்படும் இளவரசி ஆகியோர் மத்திய அரசின் அதிதீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு இவர்கள் ஏதேனும் உத்தரவுகளை பிறப்பித்து அரசின் நடவடிக்கைகளில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்களா? என தீவிரமாக மத்திய அரசு கண்காணித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications