கவிழும் ஜார்கண்ட் அரசு! இரண்டாக பிளவுபடும் ஜேஎம்எம்? பாஜகவுக்கு தாவும் சாம்பாய் சோரன்- மெகா ட்விஸ்ட்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கே உள்ள ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் அபாயமும் இப்போது ஏற்பட்டு இருக்கிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கே மிகப் பெரிய அரசியல் மாற்றம் நடக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லி பயணம்: அதாவது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவர் சம்பாய் சோரன் இன்று அதிகாலை திடீரென டெல்லிக்குக் கிளம்பி இருக்கிறார். அவர் பாஜகவில் இணைய உள்ளதாகக் கடந்த சில நாட்களாகச் செய்திகள் உலா வரும் நிலையில், இந்த டெல்லி பயணம் பல வித யூகங்களைக் கிளப்பியுள்ளது. மேலும், அவருடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த ஆறு எம்எல்ஏக்கள் உடன் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிருப்தி: சுரங்கம் தொடர்பான நிலமோசடி வழக்கில் கடந்த பிப். மாதம் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார்.. அதற்கு முன்பு அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், சம்பாய் சோரன் அம்மாநில முதல்வராகப் பதவியேற்றார். ஹேமந்த் சோரன் 5 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில், அந்த இடைப்பட்ட காலத்தில் சம்பாய் சோரன் முதல்வராக இருந்தார்.
கடந்த ஜூன் இறுதியில் சோரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், சம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். இருப்பினும், முதல்வர் பதவியில் இருந்து தன்னை ராஜினாமா செய்யச் சொன்னதால் சம்பாய் சோரன் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைய முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
6 எம்எல்ஏக்கள்: இப்போது சம்பாய் சோரனுடன் 6 எம்எல்ஏக்கள் டெல்லி சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த 6 எம்எல்ஏக்களை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினரால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. சம்பாய் சோரன் பல பாஜக தலைவர்களுடன் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக நேற்று இரவு, கொல்கத்தாவில் அவர், மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுடன் சம்பாய் சோரன் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
மறுப்பு: இருப்பினும், செய்தியாளர்கள் இது தொடர்பாகக் கேட்ட போது சம்பாய் சோரன் திட்டவட்டமாக அதை மறுத்தார். இது குறித்து அவர் கூறுகையில், "என்னை வைத்து என்ன வதந்தி பரவுகிறது என்பது எனக்குத் தெரியாது. இதனால் அவை உண்மையா இல்லையா என்று என்னால் சொல்ல முடியாது. இது குறித்து எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது... நான் எப்போதும் இருக்கும் இடத்திலேயே இருப்பேன்" என்று கூறியிருந்தார்.
"இந்தியா" கூட்டணிக்கு அக்னி பரீட்சையாக காத்திருக்கும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் எப்போது?
அதேநேரம் சம்பாய் சோரன் சமீபத்தில் தான் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் முன்னாள் எம்எல்ஏ லோபின் ஹெம்ப்ரோமை சந்தித்துப் பேசியிருந்தார். இந்த லோபின் ஹெம்ப்ரோம் பாஜகவில் இணையலாம் என்று சொல்லப்படும் நிலையில், இந்தச் சந்திப்பு நடந்தது. இருப்பினும், இது வழக்கமான சந்திப்பு தான் என்றும் இதில் அரசியல் இல்லை என்றும் கூறப்பட்டது.
ஜார்கண்ட் அரசு கவிழும் அபாயம்: மொத்தம் 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையில் ஆட்சியை அமைக்க ஒரு கட்சிக்கு 41 இடங்கள் தேவை. ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணிக்கு இப்போது 45 இடங்கள் இருக்கிறது. ஜேஎம்எம் - 26, காங்கிரஸ் 17, இடதுசாரிகள் மற்றும் ஆர்ஜேடி கட்சிகளிடம் தலா ஒரு இடம் இருக்கிறது.
இதில் சம்பாய் சோரன் மற்றும் 6 ஜேஎம்எம் எம்எல்ஏக்கள் பாஜவில் இணைந்தால் ஆளும் தரப்பினர் ஆதரவு 38ஆகக் குறையும். இதனால் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி கவிழும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications