குடும்பத் தகராறு... மருத்துவமனையில் மனைவியை சுட்டுக் கொன்ற போலீஸ்காரர் தற்கொலை முயற்சி
சண்டிகர்: குடும்பத் தகராறில் மனைவியை சுட்டுக் கொன்று விட்டுத் தற்கொலைக்கு முயன்ற போலீஸ்காரரால் சண்டிகர் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சண்டிகரைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஆனந்த் குமார். இவரது மனைவி டிம்பிள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். சமீபகாலமாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை இருந்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் டிம்பிள் தனது வேலைக்குச் சென்று விட்டார். மருத்துவமனைக்கே சென்று மனைவியுடன் தகராறு செய்துள்ளார் ஆனந்த் குமார். தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த ஆனந்த், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் மனைவியைச் சுட்டுக் கொன்றார்.
பின்னர், தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவத்தில் எதிர்பாராத விதமாக அங்கிருந்த மற்றொரு பெண்ணும் காயமடைந்தார். பின்னர், ஆனந்த் குமாரும், காயமடைந்த பெண்ணும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.
மருத்துவமனை வளாகத்தில் பெண் ஊழியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.