அம்மா உணவகம் போல அண்ணா கேண்டீன்.. அசத்தும் ஆந்திரா.. 5 ரூபாய்க்கு உணவு
அம்மா உணவகம் போல ஆந்திராவில் என்.டி.ஆர். பெயரில் 60 அண்ணா கேண்டீன்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்துவைத்தார்.
விஜயவாடா: அம்மா உணவகம் மாதிரி ஆந்திராவில் என்.டி.ஆர் பெயரில் 60 அண்ணா கேண்டீன்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று வியாழக்கிழமை தொடங்கிவைத்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில், மலிவு விலையில் உணவு வழங்க அம்மா உணவகத்தை திறந்தார்.
அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி, 2 ரூபாய்க்கு சப்பாத்தி, 3 ரூபாய்க்கு தயிர் சாதம், 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
|
வெற்றி திட்டம்
இந்த திட்டத்தின் வெற்றி பலராலும் பாராட்டப்பட்டது. இந்த திட்டத்தைப் ஆய்வு செய்த டெல்லி அரசும் டெல்லியில் மலிவு விலையில் உணவு வழங்க கேண்டீன் தொடங்கியது. இந்தியாவில் மட்டுமல்லாமல் எகிப்து நாட்டு பிரதிநிதிகள் வந்து அம்மா உணவகத்தை ஆய்வுச் செய்து சென்றனர்.

ஆந்திராவில் உணவகம்
அம்மா உணவகம் திட்டம் ஆந்திர அரசையும் கவர்ந்ததால், அதேபோல ஆந்திராவிலும் மறைந்த முதல்வர் என்.டி.ராமராவ் பெயரில் மலிவு விலை உணவு வழங்க கேண்டீன்களைத் திறக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார். இதற்காக ஆந்திர அரசு அதிகாரிகளை தமிழகத்துக்கு அனுப்பி அம்மா உணவகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.

ஆந்திராவில் அண்ணா உணவகம்
ஆந்திர அரசு அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகு, ஆந்திராவில் அண்ணா கேன்டீன்கள் தொடங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. ஆந்திரா தலைநகர் அமராவதியில் தலைமை செயலகத்தில் 2016 ஆம் ஆண்டு என்.டி.ஆர். பெயரில் அண்ணா கேன்டீனை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கிவைத்தார்.
இதே போல, மாநிலத்தின் மற்ற பகுதிகளில் என்.டி.ஆர். பெயரில் அண்ணா உணவகத்தைத் தொடங்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் நடந்துவந்தன.

முதல் கட்டம் 60 அண்ணா கேண்டீன்
இந்நிலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று புதன்கிழமை ஆந்திராவில் 60 அண்ணா உணவகத்தை தொடங்கிவைத்துள்ளார். இங்கு 5 ரூபாய்க்கு உணவு வழங்கப்படுகிறது. ஆந்திராவில் மறைந்த முதல்வர் என்.டி.ராமராவை மக்கள் அன்புடன் அண்ணா என்று அழைப்பார்கள். அதனால் உணவகங்களுக்கு அண்ணா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அண்ணா கேண்டீனில் சாப்பிட்ட நாயுடு
விஜயவாடாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு ‘அண்ணா' கேன்டீனை தொடங்கி வைத்து உணவு சாப்பிட்டார். இந்த கேண்டீன்களில் அம்மா உணவகம் போல, காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பாடு ரூ.5 மலிவு விலையில் வழங்கப்படுகிறது.

சர்வதேச ரெஸ்டாரண்ட் மாதிரி
ஆந்திராவின் அண்ணா கேன்டீன் குறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில், "இந்த கேண்டீன்களில் தூய்மை, சுகாதாரம், தரம் ஆகியவை சிறப்பாக இருக்கும். சர்வதேச ரெஸ்டாரண்ட்கள் அளவுக்கு பராமரிக்கப்படும். இந்த திட்டத்துக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அண்ணா கேண்டீனுக்கு குவியும் நன்கொடை
சந்திரபாபு நாயுடு முதல் கட்டமாக ஆந்திராவில் 60 அண்ணா கேண்டீன்களைத் தொடங்கிவைத்துள்ள நிலையில், அண்ணா கேன்டீன்களுக்காக பலர் பணமாகவும், காய்கறிகளாகவும் நன்கொடை அளித்து வருவது மூலம் இந்த திட்டம் ஆந்திராவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது தெரியவருகிறது.












Click it and Unblock the Notifications