போரூர் கட்டிட விபத்து: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் பார்வையிட்டார்
சென்னை: போரூர் அடுக்குமாடி கட்டிட விபத்து நடந்த இடத்தை இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் பார்வையிட்டார். முன்னதாக நேற்று அவர் கட்டிட விபத்தில் பலியான ஆந்திர மாநில தொழிலாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டிருந்தார்.
நேற்று முன்தினம் சென்னையில் இடியுடன் பெய்த கனமழையில் போரூர் மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. முழுவதும் கட்டுமானப் பணிகள் நடந்து முடியாத அந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் கட்டுமானப் பணியாளர்கள் தங்கியிருந்தனர்.

கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானதில் இடிபாடுகளுக்கிடையே ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து மூன்றாவது நாளாக நடந்து வருகிறது. மீட்பு பணி முழுவதுமாக முடிவடைய இன்னும் சில நாட்கள் ஆகலாம் என தேசிய பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
பலியான தொழிலாளர்களில் பெரும்பாலனவர்கள் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்தார்கள் என்று கூறப்படுகிறது.ஏற்கனவே நெல்லூர் மாவட்ட இணை ஆட்சியர் ரேகா பிரியதர்ஷனி தலைமையிலான குழு ஒன்று சென்னையில் முகாமிட்டு மீட்பு பணிகளை பார்வையிட்டு வருவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஆந்திர மந்திரி சீதாராகவராவும் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப்பணிகளை பார்வையிட்டார்.
நேற்றும் ஆந்திர இணை ஆட்சியர் ரேகா, தேசிய பேரிடர் மீட்புக்குழு இயக்குனர்கள் சர்மா, ராமானுஜன் ஆகியோருடன் கட்டிடம் இடிந்த இடத்தில் நடைபெறும் மீட்புப்பணிகளை பார்வையிட்டார். மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களையும் அவர் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், விபத்தில் பலியான ஆந்திர மாநில தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்க நேற்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக இன்று விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார் சந்திரபாபுநாயுடு. அப்போது விபத்தில் உறவுகளை இழந்து வாடுபவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அவர் ஆறுதல் கூறினார்.












Click it and Unblock the Notifications