பின்வாங்கிய சந்திரபாபு நாயுடு.. தெலங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. பாஜகவுக்கு ஆதரவாமே?
ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு சிறையில் உள்ளதால் தெலங்கனா சட்டசபை தேர்தலில் போட்டியில் இருந்து விலகுவதாக அந்த கட்சி பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெலங்கானா மாநிலத்தில் தற்போது பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சந்திரசேகரராவ் உள்ளார். இந்நிலையில் தான் தெலங்கானா சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதையடுத்து தற்போது அங்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நவம்பர் மாதம் 30ம் தேதி ஒரே கட்டமாக மாநிலத்தில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தெலங்கானாவை பொறுத்தமட்டில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
ஆந்திராவில் இருந்து கடந்த 2014ல் தெலங்கானா புதிய மாநிலமாக உருவானது முதல் அங்கு பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி தான் நடக்கிறது. முதல்வராக சந்திரசேகர ராவ் செயல்பட்டு வருகிறார். கடந்த 2014 சட்டசபை தேர்தல், 2018 சட்டசபை தேர்தல்களில் அவரது கட்சி வெற்றி பெற்ற நிலையில் வரும் தேர்தலிலும் வாகை சூடி ஹாட்ரிக் சாதனை படைக்க சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார். ஆனால் இந்த முறை காங்கிரஸ் கட்சி கடும் போட்டியை கொடுக்கும் என கூறப்படுகிறது.
மேலும் பாஜக தெலங்கனாவில் போட்டியிட்டாலும் கூட நேரடி போட்டி என்பது பிஆர்எஸ்-காங்கிரஸ் கட்சிக்கு இடையே தான் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையே தான் தெலங்கானா சட்டசபை தேர்தலில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி விலகி உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தெலங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான கசானி ஞானேஸ்வர் தெரிவித்துள்ளார்.
ஊழல் வழக்கில் தற்போது ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் தான் கசானி ஞானேஸ்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். சிறையில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த அவர் தெலங்கானா சட்டசபை தேர்தல் தொடர்பாக விவாதித்தார்.
அப்போது தெலங்கானா சட்டசபை தேர்தலில் இருந்து விலகி இருக்க சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தெலங்கனாாவின் தெலங்கு தேசம் கட்சியின் தலைவரான கசானி ஞானேஸ்வர் கூறுகையில், ‛‛தெலங்கானா சட்டசபை தேர்தலில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகி இருக்கும். வரும் தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட மாட்டாது'' என கூறியுள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆந்திராவில் செல்வாக்கு உள்ளது. ஆனால் தெலங்கானாவில் ஆந்திராவை போல் செல்வாக்கு இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ல் ஆந்திராவில் இருந்து புதிய மாநிலமாக தெலங்கானா உதயமான நிலையில் அப்போது நடந்த முதல் சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 15 தொகுதிகளில் வென்றது. அதன்பிறகு கடந்த 2018 ல் நடந்த சட்டசபை தேர்தலில் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இருப்பினும் அந்த எம்எல்ஏக்கள் முதல்வர் சந்திரசேகரராவுக்கு ஆதரவாக மாறினார்கள்.
இந்நிலையில் தான் தெலங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில் அவர்களின் ஆதரவை பெற பாஜக தயாராக உள்ளது. அதேபோல் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி தெலங்கானாவில் இல்லாத நிலையில் அவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இதனால் தெலங்கனா சட்டசபை தேர்தலில் பவன் கல்யாணின் ஆதரவையும் பாஜக பெற வாய்ப்புள்ளது.
ஒருவேளை பாஜக ஆதரவு கேட்கும்பட்சத்தில் இருகட்சிகளும் பாசிட்டிவ்வான பதில் அளிக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications