பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் சந்திரசேகர் ரத் மரணம்
பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் சந்திரசேகர் ரத் காலமானார்.
புவனேஸ்வர்: பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் சந்திரசேகர் ரத் காலமானார். அவருக்கு வயது 89.
ஒடிசா இலக்கிய எழுத்தாளர் சந்திரசேகர் ரத் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
89 வயதான சந்திரசேகர் ரத்திற்கு மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.
உயிர் பிரிந்தது
இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். 1929ஆம் ஆண்டு பலாங்கிர் மாவட்டத்தில் உள்ள மலப்படா கிராமத்தில் அக்டோபர் 17ஆம் தேதி பிறந்தார் சந்திரசேகர் ரத்.
பத்மஸ்ரீ விருது அறிவிப்பு
அவருக்கு மத்திய அரசு இந்தாண்டுக்கான பத்மஸ்ரீ விருதை அண்மையில் அறிவித்தது. மறைந்த ரத் தனது இலக்கிய படைப்புகளுக்காக ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். கேந்த்ர சாஹித்ய அகாடமி, ஒடிசா சாஹித்ய அகாடமி உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.
ஈடுசெய்ய முடியாத இழப்பு
ரத்தின் மறைவுக்கு ஒடிசா ஆளுநர் எஸ்சி ஜாமீர் இரங்கல் தெரிவித்துள்ளார். ரத்தின் இழப்பு ஒடிசா இலக்கியத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என அவர் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார். ரத்தின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அம்மாநில ஆளுநர் ஜாமீர் தெரிவித்துள்ளார்.
எப்போதும் நினைவிலிருப்பார்
ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக் ரத்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ரத்தின் மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். ரத் தனது ரசிகர்களால் எப்போதும் நினைவு கூறப்படுவார் என்றும் நவீன் பட்னாயக் தெரிவித்தார்.