சந்திரயான்-3.. நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது நாடு இந்தியா.. அமைச்சர் ஜிதேந்திர சிங்
ஸ்ரீஹரிகோட்டா: நிலவுக்கு அனுப்பப்படும் சந்திரயான்-3 விண்கலத்தின் ஏவுதலுக்கான திட்ட ஒத்திகை ஸ்ரீஹரிகோட்டாவில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக இஸ்ரோ கூறியுள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தின் மூலமாக, நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என மத்திய விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சந்திரயான்-2 விண்கலத்தை 2019 ஜூலை 22ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்பு சந்திரயான்-2 2019 செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறால் திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது.

அதேநேரம் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சந்திரயான்-3 விண்கலத்தை ஏவுவதற்கான திட்ட ஒத்திகை நிகழ்வும் வெற்றிகரமாக நேற்று நடத்தி முடிக்கப்பட்டது. தொடர்ந்து ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புதல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், சந்திரயான் - 3 விண்கலம் வரும் 14ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்கப் பயணம் விண்வெளித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க அளவில் ஒத்துழைப்பை அதிகரித்துள்ளது. இந்தியா தமது விண்வெளிப் பயணத்தை தொடங்குவதற்கு முன்பு நீண்ட காலத்திற்கு முன்பே விண்வெளி பயணத்தைத் தொடங்கிய நாடுகள் தற்போது இந்தியாவைப் பார்த்து ஆச்சரியம் அடைவதுடன் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகின்றன.
பிரதமர் மோடியின் ஆட்சியில் நமது விண்வெளி நிபுணத்துவம் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. சந்திரயான் -3 என்பது சந்திரயான் -2 விண்கலத்தின் தொடர்ச்சி. நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கத்தில் இந்தியாவின் திறனை நிரூபிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் நுழைவதற்குத் தேவையான சிக்கலான அம்சங்கள் இதில் துல்லியமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, ஆறு சக்கரங்களைக் கொண்ட ரோவர் வெளியே வந்து சந்திரனில் அது பணி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோவரில் உள்ள பல கேமராக்களின் உதவியுடன், படங்களைப் பெற முடியும். சந்திரயான் - 3 மூலம் நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.
இந்தியாவின் விண்வெளித் துறை வரும் ஆண்டுகளில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக வளர்ச்சி அடையும். நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கத்தை நிரூபிப்பது, சந்திரனில் ரோவர் சுழல்வதை உறுதி செய்தல் மற்றும் அறிவியல் சோதனைகளை நடத்துவது ஆகியவை சந்திரயான் -3 விண்கலத் திட்டத்தின் முதன்மையான மூன்று நோக்கங்கள் ஆகும். சந்திரயான் -1 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பதைக் கண்டறிந்த பெருமைக்குரியது. அமெரிக்காவின் நாசா போன்ற மிக முன்னணி விண்வெளி நிறுவனங்கள்கூட இந்த கண்டுபிடிப்பால் ஈர்க்கப்பட்டது. சந்திரயான்-3 விண்கலம் இஸ்ரோ உருவாக்கிய மார்க்-3 செலுத்து வாகனம் மூலம் விண்ணில் செலுத்தப்படும். சந்திரயான் -2 வெற்றி அடையவில்லை. அதைக் கருத்தில் கொண்டு சந்திரயான் -3 லேண்டரின் வலிமையை அதிகரிக்க சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.
சந்திரயான்-3 விண்கலம் மொத்தம் 3,900 கிலோ எடைகொண்டது. இதில் 7 விதமானஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஆர்பிட்டர் நிலவை சுற்றிவருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் அனுப்பப்படுகிறது. லேண்டர் மற்றும் ரோவர் கலன்கள் 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications