”ஜங்க்” உணவுகளுக்கு நோ - பள்ளிகளில் “டிபன் பாக்ஸ்” சோதனைக்கு சி.பி.எஸ்.இ உத்தரவு!
டெல்லி: பள்ளிகளில் மாணவர்கள் கொண்டு வருகின்ற மதிய உணவு "ஜங்க்" உணவுப் பொருளா என்று ஆசிரியர்கள் சோதனையிட சி.பி.எஸ்.இ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளில் பெரும்பாலானவர்கள் கொழுப்புச்சத்து மிகுந்த ஜங்க் வகை உணவுகளை அதிக அளவில் சாப்பிடுவதாக சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்தது.
பீட்சா, பர்க்கர், நூடுல்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், வறுக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள், சாக்லேட், சமோசா, குளிர்பானங்கள் போன்றவை ஜங்க் உணவு வகை பட்டியில் இடம் பெற்றுள்ளன.

உடல் பருமன் அபாயம்:
ஜங்க் உணவு வகைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது உடனடியாக உடல் பருமன் அபாயம் ஏற்படுகிறது. இது தவிர பிரிவு 2 ஆம் வகை நீரிழிவு நோய் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்க கோரிக்கை:
வயதான பிறகு ரத்த அழுத்தம், இதய பாதிப்புகள் வருவதற்கும் ஜங்க் உணவு வகைகளே காரணமாக அமைகின்றன. எனவே பள்ளிகளில் ஜங்க் வகை உணவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

சோதிக்க உத்தரவு:
இந்த நிலையில் மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ, தனது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், "மாணவர்கள் ஜங்க் உணவு வகைகள் பள்ளிக்கு கொண்டு வருவதை அனுமதிக்க கூடாது. இதற்காக நீங்கள் அடிக்கடி மாணவ, மாணவிகளின் டிபன் பாக்சை வாங்கி திறந்து பார்த்து சோதனையிட வேண்டும்" என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான உணவுகள்:
குறிப்பாக பீட்சா, பர்க்கர், நூடுல்ஸ் ஆகியவற்றை மாணவர்கள் சாப்பிடுவதை ஆசிரியர்கள் தடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜங்க் உணவு வகைக்கு பதில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் எவை , எவை என்பதை ஆசிரியர்கள் சொல்லி கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கண்காணிப்பு குழு அமைப்பு:
எல்லா சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் மாணவர்களுக்காக கேண்டீன் உள்ளது. இந்த கேண்டீன்களிலும் நல்ல சுகாதாரமான உணவு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கொண்ட கூட்டு கண்காணிப்புக்குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications