சென்னை வந்த ரயிலில் துணிகர கொள்ளை... ரூ. 3.5 லட்சம் நகை, பணம் திருட்டு!
விஜயவாடா: விஜயவாடாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
திங்கள்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து விஜயவாடா ரயில்வே கண்காணிப்பாளர் ஷியாம் பிரசாத் கூறுகையில், சந்தக், ஸ்மிதா உதய், தாரா வியாஸ் ஆகியோர் ஏ1 கோச்சில் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் ரயில்வே போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளனர்.
அதில் தாங்கள் வைத்திருந்த நகை, பணம் அடங்கிய பொருட்கள் திருட்டுப் போயுள்ளதாக கூறியுள்ளனர். மேலும், இந்த சூட்கேஸ்கள், காணாமல் போனதை, அதிகாலை 3.30 மணியளவில் பல்ஹர்ஷா என்ற இடத்தை ரயில் கடந்தபோதுதான் உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
அதேபோல பி 1 பெட்டியில் பயணித்த ஒரு பெண், தான் வைத்திருந்த ரூ. 10,000 பணம் அடங்கிய பர்ஸைக் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார்.
சம்பந்தப்பட்ட ரயிலில் டிடிஆரோ அல்லது போலீஸாரோ, பிற ரயில்வே ஊழியர்களோ இல்லை என்றும் பயணிகள் கூறியுள்ளனர். திருடர்கள் யாரேனும் பயணிகள் போல நடித்து அந்த ரயிலில் பயணித்து திருடி விட்டு தப்பிப் போயிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிய ரயில்வே போலீஸாருக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றார் அவர்.