நான்.. ரூ508 கோடி.. மகாதேவ் சூதாட்ட செயலி குரூப்பிடம்? பொய்யை சொன்னாலும்.. சத்தீஸ்கர் சிஎம் பாகல்
ராய்ப்பூர்: மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் ரூ508 கோடி பணம் வாங்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்த குற்றச்சாட்டுகளை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் வரும் 7 மற்றும் 17-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் மீண்டும் வெல்லும்; ஆட்சியைத் தக்க வைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். பாஜகவால் இந்த தேர்தலில் வெல்ல முடியாது என்பதும் கருத்து கணிப்பின் முடிவுகள்.

இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தை மையமாகக் கொண்டு அமலாக்கத்துறை பகீர் தகவல்களை வெளியிட்டு வருகிறது. சத்தீஸ்கரில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இன்று மாநில முதல்வர் பூபேஷ் பாகல், மகாதேவ் சூதாட்ட ஆப் உரிமையாளர்களிடம் ரூ508 கோடி தேர்தல் செலவுக்காக வாங்கியதாக தெரிவித்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் சத்தீஸ்கரில் சிக்கிய ஆசிம் தாஸின் செல்போனில் பதிவாகி இருந்த இ மெயில்களை சோதனையிட்டதாகவும் மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் முக்கிய குற்றவாளியான சுபம் சோனி அனுப்பிய மெயில்கள் மூலம் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு மொத்தம் ரூ508.6 கோடி பணம் கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.

இக்குற்றச்சாட்டை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக பூபேஷ் பாகல் கூறியதாவது: சத்தீஸ்கரில் பாஜகவானது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவற்றுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் அவதூறுகளை வீசுகிறது. அமலாக்கத்துறை மூலமாக சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தப்படுகிறது. மகாதேவ் ஆப் செயலி விவகாரத்தை முன்வைத்து எனக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் முதலில் சோதனை நடத்தி அவமானப்படுத்தியது. இப்போது யாரென்றே தெரியாத நபர்களின் வாக்கும் மூலத்தின் அடிப்படையில் ரூ508 கோடி தேர்தல் செலவுக்கு வாங்கியதாக குற்றம் சுமத்துகிறது அமலாக்கத்துறை. அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை சத்தீஸ்கர் மக்கள் எங்களுடன் இணைந்து எதிர்கொள்வர். இந்த யுத்தத்தில் நாங்கள் வெல்வோம். இவ்வாறு பூபேஷ் பாகல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications