கோட்சேதான் மகாத்மாவாம்- சாமியார் காளிசரண் மகாராஜ் மீது சத்தீஸ்கரிலும் வழக்கு- தப்பி ஓடி தலைமறைவு!
ராய்ப்பூர்: மகாத்மா காந்தியடிகளை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை மகாத்மா என புகழாரம் சூட்டிய பேசிய சர்ச்சைக்குரிய சாமியார் காளிசரண் மகாராஜ் மீது சத்தீஸ்கர் மாநில போலீசாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தப்பி ஓடி தலைமறைவாக இருக்கும் காளிசரண் மகாராஜை மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநில போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அண்மையில் தர்ம சன்சத் என்ற பெயரில் சாமியார்கள் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் அபிஜித் சரக் என்ற காளிசரண் மகாராஜ் பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் காளிசரண் மகாராஜ் பேசுகையில், இந்து மதத்தைப் பாதுகாக்கக் கூடிய ஒரு தீவிரமான தலைவரையே அரசாங்கத்தின் தலைவராக்க வேண்டும். உண்மையான மகாத்மா நாதுராம் கோட்சேதான். காந்தியடிகள் அல்ல என்றார். அவரது இந்த பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பியது.

சத்தீஸ்கர் முதல்வர் கண்டனம்
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளை அவதூறாகவும் அவரை சுட்டுப் படுகொலை செய்த கொலையாளி நாதுராம் கோட்சேவை மகாத்மா என்றும் காளிசரண் பேசியதற்கு பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், மகாத்மா காந்தியடிகளை அவதூறாகப் பேசி சமூகத்தில் விஷத்தை பரப்புகின்றனர். ஆனால் இப்படியெல்லாம் பேசி வென்றுவிட முடியும் என நயவஞ்சகர்கள் நினைத்தால் அது நடக்காது என்றார்.

மகாராஷ்டிரா சட்டசபையில்..
இந்த விவகாரம் மகாராஷ்டிரா சட்டசபையிலும் எதிரொலித்தது. காளிசரண் மகாராஜை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று சட்டசபையில் வலியுறுத்தப்பட்டது. காளிசரண் மகாராஜை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டமும் நடத்தினர். மேலும் மகாராஷ்டிராவின் கோட்வாலி போலீஸ் நிலையத்தில் காளிசரண் மகராஜ் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் கோட்சேவை புகழ்ந்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என பிடிவாதம் பிடித்தார் காளிசரண்.

சத்தீஸ்கர் போலீஸ் தேடுகிறது
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில அரசும் காளிசரண் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக ராய்ப்பூர் ஏ.எஸ்.பி. தர்கேஸ்வர் பட்டேல் கூறுகையில், காளிசரண் மீது 2 பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. காளிசரண் தற்போது எங்கே பதுங்கி இருக்கிறார் என விசாரித்து வருகிறோம். அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

ஹரித்வார் சர்ச்சை
தர்ம சன்சத் என்ற பெயரில் அண்மையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சாமியார்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பேசிய சாமியார்கள், இந்துக்கள் ஆயுதமேந்த வேண்டும்; இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும். இந்து தர்மத்தைப் பாதுகாக்க விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் போல ஒரு இந்து பிரபாகரன் முன்வர வேண்டும் என பேசியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications