'தடுப்பூசி செலவு எல்லாம் எங்களுடையது.. சான்றிதழில் மட்டும் ஏன் மோடி படம்..' அகற்றிய சத்தீஸ்கர் அரசு
ராய்ப்பூர்: 18-44 வயதுடையவர்களுக்கு மாநில அரசின் செலவில் தடுப்பூசிகளை வாங்கி, செலுத்தப்படுவதால், தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் படத்திற்குப் பதிலாக முதல்வரின் படம் பயன்படுத்தப்படுவதாக சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு விளக்கமளித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரசின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும், தடுப்பூசி ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் 18 முதல் 45 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

சத்தீஸ்கர் தடுப்பூசி பணிகள்
இருப்பினும், சில மாநிலங்களில் மட்டும் 18-44 வயதுடைய மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் 18-44 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுவாக கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்குத் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும்.

மோடியின் படம் இல்லை
அப்படி சத்தீஸ்கரில் வழங்கப்படும் அந்த சான்றிதழ் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நாடு முழுவதும் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழ்களில் பொதுவாகப் பிரதமர் மோடியின் புகைப்படமே இடம் பெற்றிருக்கும். ஆனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் 18-44 வயதுடையவர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழ்களில் மோடியின் புகைப்படத்திற்குப் பதிலாக முதல்வர் பூபேஷ் பாகேலின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

பாஜக எதிர்ப்பு
அதாவது மத்திய அரசின் கோவின் தளத்தைப் பயன்படுத்தாமல், சத்தீஸ்கர் அரசின் 'CGTEEKA' தளத்தைப் பயன்படுத்தி, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு முதல்வர் படத்துடன் தடுப்பூசி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சியான பாஜக கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது, பேரழிவு காலங்களிலும்கூட, காங்கிரஸ் தனது நலனுக்காகவே பிரச்சாரம் செய்வதாக விமர்சித்துள்ளது.

எங்கள் பணம்
இதற்குப் பதிலளித்த சத்தீஸ்கர் சுகாதார அமைச்சர் டி.எஸ்.சிங் தியோ, "இதெல்லாம் தேவையற்ற பிரச்சனை. மத்திய அரசு தடுப்பூசி வழங்குவார்களுக்குப் பிரமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. சத்தீஸ்கர் அரசு தனது சொந்த செலவில் தடுப்பூசிகளை வாங்கி, செலுத்தும் நபர்களுக்கு மட்டுமே முதல்வரின் படம் இருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதில் எந்த தவறும் இல்லை" என்றார்.

தடுப்பூசி கொள்கை
நாட்டில் தற்போது மத்திய அரசின் தடுப்பூசி கொள்கைகளின் படி 45+ வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும். 45+ மேற்பட்டவர்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேநேரம் 18-44 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பாகும்.












Click it and Unblock the Notifications