ப.சிதம்பரம் பதிலடிக்கு பதில் சொல்லாமல் தப்பிக்கும் நரேந்திர மோடி!
சில மாதங்களுக்கு முன்பு, பொது மக்கள் தங்கம் மீதுள்ள மோகத்தை தவிர்த்து தங்கம் வாங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியிருந்தார். ஆனால் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியோ பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு சிதம்பரம் பேசியதையே திரித்துக் கூறிவிட்டார்.
இதற்கு உடனே சிதம்பரம் பதிலடியும் கொடுத்துவிட்டார். அவர் கூறுகையில், பண வீக்கத்தை கட்டுப்படுத்தவே தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று நான் கூறியதாக நரேந்திர மோடி ஜோத்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசி உள்ளார். நான் அப்படி பேசவில்லை.
முதலில் பொருளாதாரம் பற்றி மோடி தெரிந்து கொள்ள வேண்டும். நடப்பு கணக்கு பற்றாக் குறை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தவே நான் பொது மக்கள் தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று கூறினேன். பல தடவை இதை நான் கூறியுள்ளேன். இதை மோடி புரிந்து கொள்ளவில்லை. முதலில் நரேந்திர மோடி நமக்கு வரலாறு பற்றி பாடம் நடத்தினார். இப்போது பொருளாதாரம் பற்றி பாடம் நடத்துகிறார்.
பண வீக்கத்துக்காக தங்கம் வாங்குவதை குறையுங்கள் என்று நான் சொல்லவில்லை. எனவே முதலில் மோடி பொருளாதாரம் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்று பதிலடி கொடுத்திருந்தார் சிதம்பரம்.
சிதம்பரம் குறிப்பிட்டதைப் போல பணவீக்க விகிதம், நடப்பு கணக்கு பற்றாக்குறை போன்றவை குறித்தோ எது எதுக்கு தங்கம் வாங்குவது தொடர்பிருக்கிறது என்பது பற்றியோ பேசாத மோடி, ''கடவுள் ஒருவருக்கு புத்திசாலித்தனத்தை கொடுத்தால் அதைப் பெற முதல் ஆளாக நிற்பார் நமது அமைச்சர்'' என்று போகிற போக்கில் ஏதோ ஒரு பதிலை கொட்டிவிட்டுப் போயிருக்கிறார்.
ஏற்கெனவே பல வரலாற்று பிழைகளை பொதுக்கூட்டத்தில் பேசுகிற மோடி, பொருளாதார விவகாரத்திலும் அதே மாதிரி பேசப் போய் சிதம்பரத்திடம் மாட்டிக் கொண்டுள்ளார், சரியான பதிலடி கூட தர முடியாமல்!