ஜன்னல் அருகே நின்று தாய்ப்பால் புகட்டியபோது மின்சாரம் தாக்கி தாயும், குழந்தையும் பலி
குர்கானில் தாய்ப்பால் புகட்டியபோது ஜன்னல் கம்பி வழியே மின்சாரம் பாய்ந்து தாய், குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
குர்கான் : குர்கானில் தாய்ப்பால் புகட்டியபோது ஜன்னல் கம்பி வழியே மின்சாரம் பாய்ந்து தாய், குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
குர்கான் வடக்குப் பகுதியில் பிம்பிசார் தெருவில் உள்ள குடியிருப்பில் தனது கணவரோடு வசித்து வந்தார் 26 வயதான பிரியங்கா பாரதி. இவருக்கு பிரின்ஸ் என்கிற கைக்குழந்தையும், ஆறு வயது பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.
கடந்த திங்கட்கிழமை இரவு தனது கணவர் வெளியில் சென்றிருந்த நிலையில், மூன்றாவது தளத்தில் உள்ள தனது வீட்டின் ஜன்னல் அருகே நின்றுகொண்டு, குழந்தை பிரின்ஸுக்கு தாய்ப்பால் புகட்டி இருக்கிறார் பிரியங்கா. இந்நிலையில், தீபாவளிக்கு போடப்பட்டிருந்த மின்விளக்கில் இருந்து ஜன்னல் கம்பியில் மின்சாரம் பாய்ந்தது.
இது தெரியாமல், ஜன்னல் கம்பியின் மீது பிரியங்கா சாய்ந்தபோது, மின்சாரம் அவரைத் தாக்கியது. இதில் அவரும், குழந்தையும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். வீட்டில் இருந்த பெண் குழந்தையின் கதறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் உள்ளே வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், மருத்துவமனையில் அவர்கள் அப்போதே இறந்துவிட்டதாகத் தெரிவித்து இருக்கிறார்கள். இதுத்தொடர்பாக, வான்ராய் பகுதி போலீஸார் இதை விபத்து வழக்காகப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.