ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு: ஆக., 23-ல் இறுதி விசாரணை... சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல அமைப்பு தொடர்ந்த வழக்கில் வரும் ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி இறுதி விசாரணை துவங்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல வாரியம் குற்றம்சாட்டியது. மேலும், காளைகளை ஜல்லிக்கட்டுப் போட்டியில் பயன்படுத்துவதை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் உச்சச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. அந்த வழக்கில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இதனிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஜல்லிக்கட்டு நடைபெற அவசர சட்டம் பிறப்பிக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கி அறிக்கை வெளியிட்டது. ஆனாலும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

கால அவகாசம்
இந்த வழக்கு விசாரணையில் பதிலளிக்க மத்திய அரசு சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது. அரசின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 26-ந் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்று விசாரணை
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகிந்தன் நாரிமன் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசின் பதில்
அப்போது, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி அறிக்கை வெளியிட்டது குறித்து மத்திய அரசு பதிலளித்தது. அதில், ஜல்லிக்கட்டு விளையட்டு என்பது மிகப்பழமை வாய்ந்தது. மேலும் முற்காலத்தில் இருந்தே நடத்தப்படும் ஜல்லிக்கட்டு பாரம்பரியம் வாய்ந்து. அதனால் தான் அனுமதி வழங்கியதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் கேள்வி
குழந்தை திருமணம் கூட பழமை வாய்ந்தது தான், அதற்கும் அனுமதி வழங்க முடியுமா? முற்காலத்தில் குழந்தை திருமணம் பாரம்பரியமாக நடந்து வந்தது. அதை தற்போது நடைமுறையில் நியாயப்படுத்த முடியுமா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

வழக்கு ஒத்திவைப்பு
இதையடுத்து ஆகஸ்ட் 23-ம் தேதி இறுதி விசாரணை தொடங்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.மேலும் இந்த வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க கூடுதல் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications