சர்ச்சைக்குரிய டோக்லாமின் வடக்கு பகுதியை ஆக்கிரமித்தது சீனா.. எல்லையில் மீண்டும் பதற்றம்!
டோக்லாமின் வடக்கு பகுதியை சீனா ஆக்கிரமித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி: பூடான் எல்லையில் சர்ச்சைக்குரிய டோக்லாமின் வடக்கு பகுதியை சீனா ராணுவம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பூடான், இந்தியா, சீனா நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடம் டோக்லாம் பீடபூமி. பூடான் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இந்திய ராணுவம் இதன் பாதுகாப்பை மேற்கொண்டு வருகிறது.
சீனா ஆக்கிரமிப்பு முயற்சி
இப்பகுதியை கைப்பற்றும் விதமாக சீனா நகர்வுகளை மேற்கொண்டது. இதனை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதனால் கடந்த ஆண்டு டோக்லாம் பீடபூமி பகுதியில் பெரும் பதற்றம் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்தது.
மீண்டும் ஆக்கிரமிப்பு
இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் டோக்லாம் பதற்றம் பணிந்தது. இந்த நிலையில் டோக்லாமின் வடக்கு பகுதியை சீனா முழுமையாக கைப்பற்றி ஆக்கிரமித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சீனா ராணுவத்தின் நடமாட்டம்
முன்னதாக டோக்லாம் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்த ராணுவ தளபதி பிபின் ராவத், அப்பகுதியில் இன்னமும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சீனா ராணுவத்தினர் நிலை கொண்டுதான் இருக்கின்றனர்.
எதிர்கொள்ள தயார்
தற்காலிக அடிப்படையில் சில கட்டமைப்புகளை சீனா ராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். அப்பகுதியில் எது நடந்தாலும் அதை எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோம் என்றார்.