மணிப்பூர் கனல்..கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை நிறுத்துங்க.. கிறிஸ்தவ சபை பேரணியால் திணறும் விஜயவாடா
அமராவதி: மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த கோரி, ஆந்திரப் பிரதேசம் விஜயவாடாவில் கிறிஸ்தவர்கள் பேரணி நடத்தியுள்ளனர்.
இந்தியாவின் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் முக்கியமானது மணிப்பூர் மாநிலமாகும். இந்த மாநிலத்தில் சமவெளி பகுதிகளை விட மலை பகுதிகள் அதிகமாக இருக்கின்றன. அதற்கேற்பவாறு பழங்குடியின மக்களும் காலங்காலமாக இங்கு வசித்து வருகின்றனர். அதேபோல சமவெளி அல்லாத பகுதிகளில் மைத்தேயி எனப்படும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் மைத்தேயி மக்கள் தங்களையும் பழங்குடியின சமூகத்தினராக அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இவர்கள் 53 சதவிகிதம் இருக்கின்றனர். மட்டுமல்லாது சட்டமன்றங்களிலும் இவர்கள்தான் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலின்போது இவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. இதனையடுத்து தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. இந்நிலையில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு மைத்தேயி சமூகத்தினர் தேர்தல் வாக்குறுதி தொடர்பாக அழுத்தம் கொடுத்திருக்கின்றனர்.
ஆனால் பாஜக தொடர்ந்து மவுனம் காத்து வந்தது. இதனையடுத்து மைத்தேயி மக்கள் நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மைத்தேயி சமூகத்தினரின் கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 19ம் தேதி உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு பழங்குடியினர் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காலங்காலமாக இந்த மலையோடு வாழ்ந்து வரும் எங்களுக்கு கொடுக்கும் அத்துனை சலுகைகளையும் பழங்குடியினர் அல்லாதோருக்கு கொடுப்பது ஏற்புடையது அல்ல என்று கூறினர்.
இதனையடுத்து தங்களது உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறி, அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் மணிப்பூர் (ATSUM) சார்பில் கடந்த 3ம் தேதி பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சேனாபதி, உக்ருல், காங்போக்பி, தமெங்லாங், சுராசந்த்பூர், சண்டேல் மற்றும் தெங்னௌபல் என 7 மாவட்டங்களில் இந்த பேரணி நடைபெற்றது. ஆனால் இதற்கு போட்டியாக பழங்குடியினர் அல்லாதவர்களும் பேரணி நடத்தினர். இப்படியாக நடத்தப்பட்ட போட்டி பேரணியானது சுராசந்த்பூர் மாவட்டத்தில் சந்தித்துக்கொண்டபோது கலவரமாக வெடித்து.
கலவரம் ஏராளமான குடிசைகளையும், சர்ச்சுகளையும் எரித்தது. பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரை நகரமான விஜயவாடாவிலும் கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏ.பி. தேவாலயங்களின் கூட்டமைப்பு தலைமையில் பிரச்சாரம் பேரணி நேற்று விஜயவாடாவில் நடந்துள்ளது. இந்த பேரணியில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பல்வேறு சபைகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றிருந்தனர். பேரணியில் பேசிய விஜயவாடா கத்தோலிக்க மறைமாவட்ட துறவி அருட்தந்தை முவ்வல பிரசாத், "மணிப்பூரில் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் கிறிஸ்தவர்களை அரசு பாரபட்சம் இல்லாமல் பாதுகாக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். பேரணையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடத்தப்பட்டுள்ளது.
மணிப்பூர் வன்முறை குறித்து எதிர்க்கட்சிகள் கூறுகையில், "பாஜக வாக்கு வங்கிக்காக அனைவருக்கும் இடஒதுக்கீடு என்று தேர்தல் வாக்குறுதியை கொடுத்தது. ஆனால், அது தற்போது மத்திய அரசுக்கு எதிராகவே திரும்பியுள்ளது. இந்த வன்முறை கலவரத்திற்கு பாஜகதான் முழுக்க முழுக்க காரணம்" என்று விமர்சித்துள்ளன.












Click it and Unblock the Notifications