டெல்லியில் தேர்தல் நெருங்கும் வேளையில் சர்ச் மீது தாக்குதல்
டெல்லி: தெற்கு டெல்லியில் உள்ள புனித அல்போன்ஸா தேவாலயம் மீது மர்ம நபர்கள் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தெற்கு டெல்லியில் உள்ள வசந்த் கஞ்ச் பகுதியில் புனித அல்போன்ஸா தேவாலயம் உள்ளது. இன்று அதிகாலை 3 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் தேவாலயத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தேவாலயத்தில் இருந்த பிரார்த்தனை பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். டிசம்பர் மாதத்தில் இருந்து டெல்லியில் இதுவரை 5 முறை தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 14ம் தேதி மேற்கு டெல்லியில் உள்ள விகாஸ்புரி பகுதியில் இருக்கும் தேவாலயத்தை தாக்கிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஜனவரி 4ம் தேதி டெல்லியில் உள்ள ரோஹினி தேவாலய வாசலில் வைக்கப்பட்டிருந்த அலங்கார தொட்டிலில் தீ வைக்கப்பட்டது.
முன்னதாக டிசம்பர் 7ம் தேதி ஜசோலாவில் உள்ள மலபார் கத்தோலிக்க தேவாலயத்தின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்கினர். டிசம்பர் 2ம் தேதி தில்ஷந்த் கார்டனில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
டெல்லியில் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. மோடி அரசு பதவிக்கு வந்ததில் இருந்து இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரித்துள்ளதாக அமெரிக்க செனட் சபையில் குடியரசுக் கட்சி எம்.பி. ஜோ பிட்ஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications