தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச்சே ஜெ. ஜாமீன் மனுவை விசாரிக்கிறது
டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரின் ஜாமீன் மனுக்களையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான முதன்மை பெஞ்ச்சே விசாரிக்கவுள்ளது.
முன்னதாக நீதிபதிகள் விக்ரம்ஜித் சென் மற்றும் பிரபுல்ல சந்திர பந்த் ஆகியோர் அடங்கிய கடைசி பெஞ்ச் விசாரிக்கும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் தற்போது தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச்சே விசாரிக்கவுள்ளது.
தலைமை நீதிபதி தத்து கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஜெயலலிதா உள்ளிட்டோரின் மனுக்களை அவர் விசாரித்தால் தேவையில்லாத விமர்சனங்கள் எழலாம் என்ற கருத்தில் நீதிபதிகள் சென், பந்த் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
ஆனால் வழக்கமாக முக்கிய மனுக்களை எப்போதுமே முதன்மை பெஞ்ச்தான் விசாரிக்கும். அந்த வழக்கப்படி தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச்சே விசாரிக்கவுள்ளது.
ஏற்கனவே கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் மனு ஒத்திவைக்கப்பட்டபோது நீதிபதி ரத்னமாலாவைக் கண்டித்து கர்நாடக உயர்நீதிமன்ற வளாகத்திலேயே அதிமுகவினர் போராட்டம் நடத்தியது நினைவிருக்கலாம்.