காவிரி பிரச்சினையில் தலையிடுவதா?.. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது மாண்டியா கோர்ட்டில் வழக்கு
டெல்லி: காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டதை எதிர்த்து மாண்டியா நீதிமன்றத்தில் ராஜண்ணா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தினசரி வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் கர்நாடகம் பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீரும், கபிணி அணியில் இருந்து 5 ஆயிரம் கனஅடி நீரும் காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாண்டியாவைச் சேர்ந்த எம்.டி.ராஜண்ணா என்பவர் மாண்டியா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழகத்திற்குத் தண்ணீர் தர உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அதிருப்தி அடைந்தேன். காவிரி நதி நீர் விவகாரத்தில் எனக்கு தனிப்பட்ட மற்றும் பொதுநலனும் உண்டு. தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவது குறித்த உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு என்னை மிகவும் துயரமடைய செய்துள்ளது.
நதிநீர் பிரச்சினைகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. எனவே உச்ச நீதிமன்றம் சட்டவிரோதமான உத்தரவை பிறப்பித்துள்ளது. இது சட்டத்துக்கு புறம்பான உத்தரவு என நீதிபதிகளுக்கு தெரியும். எனவே, இது குற்றமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் காவிரிப் பிரச்சினையில் தலையிட்டது சட்டவிரோதம் ஆகும். இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா, உதய் உமேஷ் லலித் ஆகியோர் மீது நடவடிக்கை தேவை. தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, இருமாநில தலைமை செயலர்கள் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளார்.
மேலும், தாக்கூர், ஜெயலலிதா, சித்தராமயைா, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதய் உமேஷ் ஆகியோர் மீது 420 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் ராஜண்ணா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications