ஹைதராபாத்தில் பள்ளி டாய்லெட்டில் குழந்தையை பெற்றெடுத்த 13 வயது மாணவி
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 13 வயது மாணவி பள்ளியின் கழிவறையில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான மாதபூரில் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி 9ம் வகுப்பு படித்து வருகிறார். சனிக்கிழமை பள்ளிக்கு வந்த மாணவி வகுப்பு நடந்து கொண்டிருக்கையில் தனக்கு வயிறு வலிப்பதாக ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு ஆசிரியை அவரை கழிவறைக்கு சென்று வருமாறு கூறியுள்ளார். கழிவறைக்கு சென்ற மாணவி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். சிறுமி குழந்தையுடன் வந்ததை பார்த்த ஆசிரியர்களும், மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுமி கர்ப்பமாக இருந்த செய்தி அவரது பெற்றோருக்கே தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில் அவர் குழந்தை பெற்ற செய்தி அறிந்து அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமி தனது வயிற்றை ஸ்கார்ப் வைத்து மறைத்துக் கொண்டே இருந்ததாகவும், வகுப்பில் மடியில் பையை வைத்து அமர்ந்ததாலும் அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவில்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். முதல்கட்ட விசாரணைக்கு பிறகு போலீசார் தினேஷ் என்ற வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறுமியுடன் தினமும் பள்ளி வரை வந்த தினேஷ் தான் அவரை கர்ப்பமாக்கியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.