ஷாக் சம்பவம்! பள்ளி பேருந்தை தவறவிட்டதால்.. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுவன்
இந்தூர்: மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் பள்ளி பேருந்தைத் தவறிவிட்டதால் மனமுடைந்த 9 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தை அடுத்துள்ள ஆம்தோ கிராமத்தை சேர்ந்த சிறுவன், கிராமத்தின் அருகே உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த மாணவர் தினமும் பள்ளி பேருந்து மூலம் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். பள்ளி செல்ல அதீத ஆர்வத்துடன் இருக்கும் இந்த மாணவர், அனைத்து நாட்களிலும் சரியாகப் பள்ளிக்குச் சென்றுவிடுவார்.

மாணவர் தற்கொலை
இந்தச் சூழலில் கடந்த திங்கள்கிழமை வழக்கம் போலப் பேருந்து நிறுத்தத்திற்கு அவர் சென்றுள்ளார். இருப்பினும், சற்று தாமதமாகச் சென்றதால், பள்ளி பேருந்து இந்த மாணவரை விட்டுவிட்டுக் கிளம்பிவிட்டது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அந்த மாணவர், வீட்டில் தனியாக இருக்கும்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் தகவல்
இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள ஆம்தோ கிராமத்தில் நடந்துள்ளது. இது குறித்து அப்பகுதி போலீஸ் அதிகாரி ரவி ஷக்யா கூறுகையில், "தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுவன் திங்கள்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். சிறுவன் பள்ளிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளான். இருப்பினும் பேருந்தைத் தவற விட்டுவிட்டான்.

அதீத ஆர்வம்
அந்த சிறுவன் பள்ளி செல்வதில் அதீத ஆர்வத்துடன் இருந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். பேருந்தைத் தவறவிட்டதால் அந்த சிறுவன் மிகுந்த வருத்தத்தில் இருந்துள்ளான்" என்று அவர் தெரிவித்தார். கடந்த திங்கள்கிழமை பேருந்தைத் தவறவிட்ட பிறகு அழுது கொண்டே சிறுவன் வீடு திரும்பியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். பின்னர் அவர் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

உறவினர் கருத்து
இது குறித்து அச்சிறுவனின் உறவினர் ஒருவர் கூறுகையில், "அவன் படிப்பில் சிறப்பாகவே இருந்தான். திங்கள்கிழமை மதியம் பள்ளிச் சீருடையை அணிந்தவாறே வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டான்" என்று தெரிவித்தார். இளம் வயதினர் படிப்பு விஷயத்தில் பெற்றோர் தரும் அழுத்தத்தால் இதுபோன்ற தவறான முடிவுகளை சில சமயம் எடுப்பதாகவும் சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துவதும் இதுபோன்ற செயல்களைத் தூண்டுவதாகவும் குழந்தை நிபுணர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications