சுத்தமான இந்தியா... ‘துடைப்பம்’ கொண்டு மோடி வீட்டின் அருகே சுத்தம் செய்த கெஜ்ரிவால்
டெல்லி: தூய்மையான இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்த அதே நேரத்தில் அவரது வீட்டின் அருகில் உள்ள தெருவைச் சுத்தப் படுத்திக் கொண்டிருந்தார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
மகாத்மா காந்தியின் கனவுத் திட்டமான ‘தூய்மையான இந்தியா'வை உருவாக்கும் நோக்கத்தில் இன்று, ‘இந்தியாவை தூய்மைப்படுத்துவோம்' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

டெல்லி செங்கோட்டை சாலையில் இத்திட்டத்தை தொடங்கி வைத்த மோடி, ‘செவ்வாய் கிரகத்தை அடைய முயன்ற நம்மால், நிச்சயமாக தூய்மையான இந்தியாவை உருவாக்க முடியும். இதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை' எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும், "இந்த திட்டத்தின் பலனை மத்திய அரசு சொந்தம் கொண்டாடாது. இந்த தூய்மைப்படுத்தும் இயக்கத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம். இது இந்தியர்கள் அனைவரின் உழைப்பில் கிடைக்கும் பலனாகத்தான் இருக்கும்" என அவர் குறிப்பிட்டார்.
செங்கோட்டை அருகே மோடி உரையாற்றிக் கொண்டிருந்த அதே நேரத்தில், பிரதமரின் இல்லம் அமைந்திருக்கும் ரேஸ் கோர்ஸ் சாலையை சுற்றியுள்ள பகுதிகளை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ஆதரவாளர்களுடன் சென்று சுத்தப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications