"சூப்பர்" குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளி மீண்டும் திறக்கப்படுகிறது.. அடிக்கல் நாட்டிய அமைச்சர்
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே மூடப்பட்ட தமிழ் பள்ளி மீண்டும் திறக்கப்பட உள்ளது.
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே மணி நகர் என்ற இடத்தில் இருந்த தமிழ் பள்ளி மூடப்பட்டது. தற்போது மூடப்பட்டுள்ள அந்த தமிழ் பள்ளி மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதற்காக அந்த பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே மணி நகர் என்ற இடம் உள்ளது. அகமதாபாத் மேற்கு தொகுதிக்கு உள்பட்ட தமிழர்கள் கணிசமான அளவில் வசிக்கின்றனர்.
இந்த மணிநகரில் தமிழ் வழியில் கற்பிக்கும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 1971- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தபள்ளியில் மாணவர் சேர்க்கை போதிய அளவு இல்லை என்பன உள்பட பல்வேறு காரணங்களை காட்டிய குஜராத் அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு பள்ளியை மூடியது.

பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலை
இதற்கு தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் அகமதாபாத்தில், தமிழ் வழியில் நடத்தப்பட்டு வரும் பள்ளிக்கூடம், மாணவர்களின் சேர்க்கை குறைவு காரணமாக திடீரென மூடப்படுவது குறித்து வருத்தம் அடைந்தேன். இந்த பள்ளி மூடப்பட்டால், அங்கு படித்து வரும் மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படும்.

எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்
தமிழர்கள் குஜராத்தின் வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டுமிருக்கிறார்கள். எனவே, குஜராத்தில் வசிக்கும் தமிழ்ச் சிறுபான்மையினரின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும். பள்ளிக்கூடம் தொடர்ந்து நடப்பதற்கு குஜராத் முதல்வர் தலையிட வேண்டும். பள்ளிக்கூடத்திற்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ள தயராக இருக்கிறது" என்று தனது கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.

அடிக்கல் நாட்டிய தங்கம் தென்னரசு
இந்த நிலையில், தமிழக அரசு மற்றும் அகமதாபாத் தமிழ்ச்சங்கம் ஆகியவை மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் காரணமாக மூடப்பட்டுள்ள தமிழ் பள்ளி மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதற்காக அந்த பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. தமிழ் பள்ளியின் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. இதில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார். பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.

ஆங்கில வழி கல்வி
இதுவரை தமிழ் வழியில் மட்டுமே கல்வி கற்பிக்கப்பட்டு வந்த நிலையில், புதுக்கப்பிட்ட பிறகு இந்த பள்ளியில் ஆங்கில வழி கல்வியில் தமிழ் உள்பட 4 முக்கிய முக்கிய மொழிகளை கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் போதிய மாணவர் சேர்க்கை இல்லை என காரணம் கூறி கடந்த 2020 ஆம் ஆண்டு மூடப்பட்டது அங்கு வசிக்கும் தமிழர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. தற்போது பள்ளியை மீண்டும் திறக்க தமிழக அரசு மற்றும் அகமதாபாத் தமிழ் சங்கம் ஆகியவை நடவடிக்கை எடுத்துள்ளது அங்கு வாழும் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications