தமிழ்த்தாய் வாழ்த்து போல மேற்கு வங்காள வாழ்த்து... முதல்வர் மம்தாவே எழுதி அசத்தல்!
தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்பற்றி மேற்கு வங்கத்திற்கு தனி வாழ்த்துப் பாடல் எழுதுகிறார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.
கொல்கத்தா: தமிழகத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இருப்பது போல், மேற்கு வங்க மாநிலத்திற்கு என தனியாக ஒரு வாழ்த்து பாடல், லோகோ ஆகியவற்றை உருவாக்கும் முயற்சியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தீவிரம் காட்டிவருகிறார்.
மேற்கு வங்கத்தை கைப்பற்ற பாஜக பல்வேறு அரசியல் முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால், பாஜக, அன்னிய கலாச்சாரத்தை மேற்கு வங்கத்தில் திணிக்க பார்க்கிறது என அம்மாநில முதல்வர் மம்தா குற்றம் சாட்டி வருகிறார்.
அத்துடன் அவர் மேலும் பல புதிய முயற்சிகளில் இறங்கியுள்ளார். தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் உள்ளது போல், ஒடிசா, குஜராத் மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் பெருமை உணர்த்தும் வாழ்த்து பாடல் நடைமுறையில் உள்ளது.
இதேபோன்று, மேற்கு வங்க மாநிலத்திற்கும் ஒரு வாழ்த்து பாடலை மம்தா பானர்ஜியே எழுதி வருகிறார். இந்த பாடல் மிகவும் உணர்ச்சிகரமாக, வங்க எழுச்சியை ஊட்டுவதாக இருக்கும் என, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மேற்கு வங்கம் மாநிலத்தின் பெருமையை எடுத்து கூறும் வகையில் ஒரு லோகோவை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். மம்தா பானர்ஜி, கவிதை எழுதுவது, ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.