மாலையில் மகளின் பள்ளி விழாவிற்கு செல்ல திட்டம்... காலையில் விபத்தில் பலி.. துணை விமானியின் சோகக்கதை
டெல்லி: எல்லைப் பாதுகாப்பு படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் பலியான துணை விமானி, பணி முடிந்து வீடு திரும்பியதும் மாலையில் மகளின் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
டெல்லி விமான நிலையம் அருகே நேற்று எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான பீச்கிராப்ட் பி200 என்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதில், அந்த விமானத்தில் பயணம் செய்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கிய அந்த விமானத்தை கேப்டன் பகவதி பிரசாத் பட் என்ற விமானி ஓட்டிச் சென்றுள்ளார். துணை விமானியாக ராஜேஷ் ஷிவ்ரைன் (38) என்பவர் சென்றுள்ளார். இவருக்கு பிரத்யுமன், பாரி என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இவர் மாலையில் தன்னுடைய 5 வயது மகளின் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக விமானம் விபத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
மாலையில் விழாவுக்குச் செல்லலாம் என்ற எண்ணத்தில் இருந்த ராஜேஷின் குடும்பத்தார், அவரது மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். ராஜேஷின் உடலைக் கண்டு அவரது குடும்பத்தார் கதறி அழுதக் காட்சிகள் கல் நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.
1977ம் ஆண்டு பிறந்தவர் ஷிவ்நரைன். 2002ம் ஆண்டு ஷிவ்நரைன் எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர்ந்தார். பிவானியில் வசித்து வந்த ஷிவ்நரைன், 2009ம் ஆண்டு எல்லைப் பாதுகாப்புப் படையின் விமானப் பிரிவில் இணைந்தார். அதன் பின்னர் சிறப்புப் படைப் பிரிவில் நிரந்தரமாக பணியமர்த்தப்பட்டார்.












Click it and Unblock the Notifications