நிலக்கரி சுரங்க ஊழல்: உச்சநீதிமன்றத்தில் சிபிஐ இன்று அறிக்கை தாக்கல்?

பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரித்துறை பொறுப்பு வகித்த காலத்தில் நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை பல்வேறு தரப்பினருக்கு ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கை குற்றம் சாட்டியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த ஊழலில் இதுவரை சி.பி.ஐ. 14 வழக்குகள் பதிவு செய்துள்ளது. ஒடிசாவில் தலபிரா 2 மற்றும் தலபிரா 3 என்ற இரண்டு நிலக்கரி சுரங்கங்களை விதிமுறைகளை மீறி தித்யபிர்லா குழுமத்தை சேர்ந்த ஹிண்டால்கோவுக்கு ஒதுக்கியது தொடர்பாக 14-வது வழக்கினை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் ஆதித்ய பிர்லா குரூப் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, ஹிண்டால்கோ, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக் உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் நிலக்கரித்துறை பொறுப்பு வகித்த பிரதமரும் குற்றவாளிதான் என பி.சி.பரேக் கருத்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பிரதமர் அலுவலகம், ஒடிசா நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் வழக்கின் விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் இன்று அல்லது நாளை தாக்கல் செய்ய இருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications