பாகிஸ்தான் மர்ம படகு வெடித்த விவகாரம்: கடலோர காவல் படை டி.ஐ.ஜி லோஷாலி டிஸ்மிஸ்
டெல்லி: பாகிஸ்தானில் இருந்து வந்த மர்மப் படகு ஒன்று குஜராத் மாநில கடற்பகுதியில் வெடித்து சிதறி மூழ்கிய விவகாரம் குறித்து மத்திய அரசின் கருத்துக்கு நேர்மாறாக கருத்து தெரிவித்ததற்காக கடலோரக் காவல்படை டி.ஐ.ஜி.யான பி.கே. லோஷாலி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் இருந்து வந்த சிறிய ரக மர்மப்படகு இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டது. வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட அந்த கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் இடைமறித்து விரட்டியபோது நடுக்கடலில் வெடித்துச் சிதறியது.
குஜராத்தின் போர்பந்தர் கடல் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த மர்மப்படகு வட்டமிட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்திய கடலோர காவல் படையினர் அன்றிரவு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடலோர காவல் படையின் கண்காணிப்பு விமானமும் அந்தப் பகுதியில் வட்டமடித்து நோட்டமிட்டது.

சுமார் 12 மணி நேர தேடுதல் வேட்டையில் போர்பந்தரில் இருந்து தென்மேற்கில் சுமார் 365 கி.மீ. தொலைவில் சிறிய ரக மர்மப்படகு இந்திய எல்லை நோக்கி வேகமாக முன்னேறி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல்கள் அந்தப் பகுதியில் அரண் அமைத்து இடைமறித்தன. அந்த மர்மப்படகில் சுமார் 4 பேர் இருந்தனர். அவர்கள் இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல்களை பார்த்ததும் மீண்டும் பாகிஸ்தான் எல்லையை நோக்கி படகை திருப்பி தப்பிக்க முயன்றனர்.
உடனடியாக சுதாரித்துக்கொண்ட கடலோர காவல் படையினர், மர்மப்படகை பின் தொடர்ந்து விரட்டிச் சென்றனர். படகை நகர்த்தக்கூடாது. நாங்கள் சோதனையிடப் போகிறோம் என கடலோர காவல் படையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த எச்சரிக்கைக்குப் பிறகு அந்த மர்மப்படகின் வேகம் அதிகரித்தது. இந்திய கடலோர காவல் படையினரும் படகை விடாமல் துரத்தினர். சுமார் ஒரு மணி நேரம் கடலில் போக்குக்காட்டி தப்பிக்க முயன்றது. ஆனால் கடலோர காவல் படை கப்பல்கள் நெருங்கியதால் நடுக்கடலில் அந்த மர்மப்படகு வெடித்துச் சிதறியது.
பாகிஸ்தானில் இருந்து வந்த மர்மப்படகு முழுவதும் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. அதனால் கப்பல் முழுவதும் தீக்கிரையாகி சாம்பலானது. மர்மப்படகில் வந்த நபர்கள் தற்கொலைப்படை தீவிரவாதிகளாக இருக்கலாம். அவர்களும் படகோடு சேர்ந்து வெடித்துச் சிதறியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும், உறுதியான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
மத்திய அரசு விளக்கம்
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் விளக்கம் அளித்தபோது, படகில் இருந்தவர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வந்த பயங்கரவாதிகள் என்றார். மேலும், இந்திய கடலோரக் காவல்படையினரிடம் சிக்காமல் இருப்பதற்காக 4 பேரும், படகுக்கு தீ வைத்துவிட்டு, தாங்களும் தற்கொலை செய்து கொண்டதாக பாரிக்கர் தெரிவித்தார்.
டி.ஜி.ஜியின் மாற்று கருத்து
இதற்கிடையில், கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி கடற்படை வீரர்கள் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கடற்படை டி.ஐ.ஜி. பி.கே. லோஷாலி, சந்தேகத்துக்குரிய அந்த பாகிஸ்தான் கப்பலை சுட்டுவீழ்த்தும்படி நான்தான் உத்தரவிட்டேன் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
சுட்டு வீழ்த்த உத்தரவு
பாகிஸ்தான் படகை சுற்றிவளைத்துள்ளதாக நமது கடற்படை வீரர்கள் எனக்கு தெரிவித்தனர். அப்போது, நான் குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகரில் இருந்தேன். அவர்களை பிடித்து வைத்து பிரியாணி பரிமாறிக் கொண்டிருக்க முடியாது. படகுடன் சேர்த்து அவர்களை சுட்டுவீழ்த்துங்கள் என நான் உத்தரவிட்டேன் என லோஷாலி கூறினார்.
டி.ஐ.ஜி சஸ்பெண்ட்
இதையடுத்து, அவர் கடற்படை டி.ஐ.ஜி. பணியில் இருந்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். பாகிஸ்தான் கப்பல் சுட்டுவீழ்த்தப்பட்ட வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் அவர்மீது கடந்த மூன்று மாதங்களாக துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டுவந்தது.
லோஷாலி டிஸ்மிஸ்
இந்நிலையில், விசாரணையின்போது பாகிஸ்தான் மர்மப்படகு எரிந்து மூழ்கியது தொடர்பாக அரசின் கருத்துக்கு எதிராக முன்னுக்குப்பின் முரணான தகவல்களை லோஷாலி தெரிவித்தது உறுதிசெய்யப்பட்டதால் அவரை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள் நிரூபணம்
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கடலோரக் காவல்படையின் மூத்த அதிகாரி, "லோஷாலி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் குற்றவாளி என்பது விசாரணை வாரியத்தால் சனிக்கிழமை கண்டறியப்பட்டது. இதையடுத்து, பணியில் இருந்து லோஷாலி நீக்கப்பட்டுள்ளார்' என்றார்.












Click it and Unblock the Notifications