புகார் கொடுக்க வந்த முதியவரை ஷூவுக்கு பாலிஷ் போட வைத்த போலீஸ்: வீடியோ இதோ
லக்னோ: உத்தர பிரதேசத்தில் செல்போன் திருடுபோனது குறித்து புகார் அளிக்க வந்த முதியவரை போலீசார் தங்களின் காலணிகளுக்கு பாலிஷ் போட வைத்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரை சேர்ந்த ஒருவரின் செல்போன் திருடுபோய்விட்டது. இதையடுத்து அவர் அது குறித்து புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு சென்றார். போலீசாரோ நீங்கள் எங்களின் காலணிகளுக்கு பாலிஷ் போட்டால் தான் புகாரை ஏற்றுக் கொள்வோம் என தெரிவித்தனர்.
வேறு வழியில்லாமல் அந்த முதியவரும் காவல் நிலையத்தில் அமர்ந்து காலணிகளுக்கு பாலிஷ் போட்டார். அவர் பாலிஷ் போடுகையில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து முசாபர்நகர் எஸ்.பி. சந்தோஷ் குமார் கூறுகையில்,
காலணிகளுக்கு பாலிஷ் போட வைத்தது குறித்து எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.