கருப்பு பணத்தை பதுக்கிய அம்பானிகள் உட்பட பலரையும் காப்பாற்றும் பாஜக-காங்கிரஸ்: கெஜ்ரிவால்
டெல்லி: வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் அம்பானி சகோதரர்கள் உட்பட பலரையும் காங்கிரஸும் பாஜகவும் காப்பாற்றுகிறது என்று டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சாடியுள்ளார்.
கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் 3 தொழிலதிபர்களின் பெயரை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தெரிவித்தது. மேலும் பலரது பெயரும் வெளியாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:
வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி 2 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியிட்டிருந்தது. அந்த பட்டியலில் தற்போது மத்திய அரசு தெரிவித்திருக்கும் 3 பேரின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
தற்போது பாஜக அரசு வெளியிட்டிருக்கும் பட்டியல் முழுமையானது அல்ல. காங்கிரஸ், பாஜகவைப் பொறுத்தவரை தங்களுக்கு வேண்டியவர்களைப் பாதுகாக்கவே செய்கிறது.
அம்பானி சகோதரர்களும் அவரது தாயாரும் வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர்.
இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.