நரேந்திர மோடியின் ‘கழிவறை’ பேச்சுக்கு பாஜக மன்னிப்பு கோர வேண்டும்: ராஜீவ் சுக்லா

குஜராத் மாநில முதலமைச்சரும், பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளருமான நரேந்திர மோடி, நேற்று முன் தினம் டெல்லியில் உள்ள தியாகராஜா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, ‘என்னை எல்லோரும் இந்துத்வா தலைவர் என்ற கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறார்கள். ஆனால் உண்மையில் நான் எத்தகைய சிந்தனை கொண்டவன் என்பதை இப்போது சொல்கிறேன். முதலில் கழிவறை கட்டவேண்டும். அதன்பிறகுதான் சாமி கும்பிட கோவில் கட்ட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.
கழிவறை பற்றிய மோடியின் பேச்சை மற்ற கட்சிகள் சர்ச்சைக்குரிய ஒன்றாக எடுத்துக் கொண்டுள்ளன. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா இது குறித்து கூறியதாவது, ‘நரேந்திர மோடி இந்துத்வா தலைவர் அல்ல. இந்துக்களுக்காக எதுவும் செய்யவும் இல்லை. ஆனால் இந்துக்களை தவறாக வழிநடத்தி அவர்களுடைய வாக்குகளை பெறும் நோக்கத்தில் அவர் இந்துத்வா தலைவராக முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முன்பு ஒருமுறை பேசும் போது, கிராமங்களில் கோவில்கள் கட்டுவதை விட முதலில் கழிவறைகள்தான் கட்ட வேண்டும் என்று கூறினார். அப்போது அதை வன்மையாக கண்டித்த பாரதீய ஜனதா, அவர் தனது பேச்சுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரியது. ஆனால் இப்போது நரேந்திர மோடி பேசி இருப்பது பற்றி பாரதீய ஜனதா வாயை திறக்காமல் மவுனமாக இருப்பது ஏன்?' என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications