ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து இருக்கட்டும்.. தேர்தல் எப்போது? மோடிக்கு காங்கிரஸ் கேள்வி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் உறுதியாக சொல்லுங்கள் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
லோக்சபா தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் குறைவான நாட்களே இருக்கின்றன. எனவே, அரசியல் கட்சிகள் களத்தில் தங்களது செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக பாஜக இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் பாஜக வென்றுவிட்டால், நேருவுக்கு அடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையை நரேந்திர மோடி பெறுவார்.

மட்டுமல்லாது பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழாவும் 2025ல் வருவதால் இதை சிறப்பாக கொண்டாட பாஜக ஆட்சியில் இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே நாடு முழுவதும் 370 தொகுதிகளை குறி வைத்து பாஜக களத்தில் இறங்கியுள்ளது. மறுபுறம் பாஜகவுக்கு டஃப் கொடுக்கும் வகையில், மாநில கட்சிகளை இணைத்து இந்தியா கூட்டணி என்கிற பெயரில் தேர்தலை எதிர்கொள்கிறது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். எனவே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த தேர்தலில் ஜம்மு காஷ்மீர் பெரும் கவனம் பெற்றிருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இம்மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இது இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பெரும் விமர்சனங்களை கிளப்பியிருந்தது. இதனையடுத்து இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. அரசியல் தலைவர்கள் தொடர்ந்து பல நாட்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த முறை மாநிலத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கும் 5 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
அதாவது, முதல் கட்டமாக உத்தம்பூரில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. அதன் பின்னர் ஜம்மு தொகுதிக்கு ஏப்.26ம் தேதியும், அனந்த்நாக் தொகுதியில் மே 7ம் தேதியும், ஸ்ரீநகர் தொகுதிக்கு மே 13ம் தேதியும் இறுதியாக பாரமுல்லா தொகுதிக்கு மே 20ம் தேதியும் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
"விரைவில் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து.." சட்டசபை தேர்தல் எப்போது? பிரதமர் மோடி முக்கிய தகவல்
இந்நிலையில், உத்தம்பூரில் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, “இங்கே சட்டசபைத் தேர்தல் நடைபெறும் காலம் வெகு தொலைவில் இல்லை. விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்” என்று கூறியிருந்தார்.
ஆனால், பிரதமரின் பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்திருக்கிறது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், “ஜனநாயகத்தை முடக்கியதற்கு பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அதாவது, “கடந்த 2018ம் ஆண்டில் மெகபூபா முஃப்தி தலைமையிலான அரசாங்கத்திற்கான ஆதரவை பாஜக வாபஸ் பெற்றதில் இருந்து, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் உள்ளது. அன்று முதல் ஜம்மு காஷ்மீர் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமல் தவித்து வருகின்றனர்.
சட்டசபை தேர்தல் நடத்தப்படாமல் தாமதமாக்கப்பட்டு வருவதால், ராஜ்யசபாவிலும் நான்கு இடங்கள் காலியாக உள்ளன. தேர்தலை நடத்த பாஜக ஏன் இவ்வளவு காலம் காத்திருந்தது? மக்கள் தீர்ப்புக்கு பயப்படுகிறார்களா? மோடியை தலைவராக தேர்ந்தெடுக்காததால், அம்மாநில மக்கள் எவ்வளவு காலம்தான் தேர்தலை எதிர்கொள்ளாமல் இருப்பார்கள்?
ஜம்மு-காஷ்மீரில் உள்ள 4,892 பஞ்சாயத்துகள் மற்றும் 316 தொகுதி மேம்பாட்டு கவுன்சில்களின் பதவிக்காலம் ஜனவரி 9 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பரில் முடிவடைந்துவிட்டது. பிரதமர் மோடி வாக்குறுதியளித்த 'வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்' எங்கே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications