"விரைவில் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து.." சட்டசபை தேர்தல் எப்போது? பிரதமர் மோடி முக்கிய தகவல்
ஸ்ரீநகர்: காஷ்மீருக்கு பிரச்சாரத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கே சட்டசபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது குறித்தும் மாநில அந்தஸ்து குறித்தும் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு அங்கு அரசியல் சார்ந்த நடவடிக்கை எதுவும் நடக்கவில்லை.

பிரதமர் மோடி: இதற்கிடையே காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்தும் காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து எப்போது வழங்கப்படும் என்பது குறித்தும் பிரதமர் மோடி சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அவர் கூறியுள்ள இந்தக் கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
காஷ்மீரில் தேர்தல் எப்போது: இது தொடர்பாகக் காஷ்மீரின் உதம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "மோடி முன்னோக்கி யோசிப்பவன். இதுவரை நடந்தது டிரெய்லர் மட்டுமே. புதிய ஜம்மு-காஷ்மீரை உருவாக்குவதில் நான் இன்னும் மும்முரமாக இருக்க வேண்டும். இங்கே சட்டசபைத் தேர்தல் நடைபெறும் காலம் வெகு தொலைவில் இல்லை. விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும். இதன் மூலம் உங்களால் உங்கள் கனவுகளை உங்கள் எம்எல்ஏ மற்றும் அமைச்சர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
பல தலைமுறைகளுக்குப் பிறகு பயங்கரவாதம், பிரிவினைவாதம், கல் வீச்சு, மறியல் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவை குறித்த அச்சமின்றி காஷ்மீரில் தேர்தல் நடக்க உள்ளது. இங்கு வைஷ்ணோ தேவி மற்றும் அமர்நாத் யாத்திரைக்கு வருவோரின் பாதுகாப்பு குறித்து கவலை இருந்தது. ஆனால், இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியைக் காண்கிறது மக்களுக்கு அரசு மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.
கவலையே இல்லை: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கு நாட்டின் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளைப் பற்றி கவலை இல்லை. மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவதே அவர்கள் வேலை. நீதிமன்றத்தால் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் ஒருவரது வீட்டிற்குச் சென்று, சிவராத்திரி காலத்தில் ஆட்டிறைச்சி சமைத்து, நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய வீடியோ எடுத்துப் போடுகிறார்கள். இங்கே சட்டம் யாரையும் எதையும் சாப்பிடுவதைத் தடுக்கவில்லை.. ஆனால் இவர்களின் எண்ணம் வேறு.
முகலாயர்கள் இங்குத் தாக்கிய போது, கோவில்களை இடிக்கும் வரை முகலாயர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. முகலாயர்களைப் போலவே, நாட்டு மக்களைக் கிண்டல் செய்தால் மட்டுமே இவர்களுக்குத் திருப்தி ஏற்படும்" என்று காங்கிரஸை மறைமுகமாக அவர் சாடி பேசினார்.
ராமர் கோயில்: தொடர்ந்து ராமர் கோயில் குறித்து பேசிய அவர், "ராமர் கோயில் ஒருபோதும் தேர்தல் விவகாரமாக பாஜகவுக்கு இருந்ததே இல்லை. அது வரும் காலத்திலும் தேர்தல் விவகாரமாக மாறாது.. பாஜக உருவாகும் முன்னால் இருந்தே ராமர் கோயில் போராட்டம் இருந்தது... அந்நிய படையெடுப்பாளர்கள் நமது கோயில்களை அழித்தபோது, இந்திய மக்கள் தங்கள் மத ஸ்தலங்களைக் காப்பாற்றப் போராடினார்கள். காங்கிரஸ் தலைவர்கள் பெரிய பங்களாக்களில் வசித்து வந்தனர். ஆனாலும் அவர்களால் ராமருக்கு ஒரு கோயிலைக் கட்டி தர முடியவில்லை" என்று சாடி பேசினர்












Click it and Unblock the Notifications