”ஒரு மனைவி இங்க இருக்காங்க, இன்னொரு மனைவி எங்கே... குமாரசாமி?”
பெங்களூர்: எல்லா வகையான சொத்து விவரங்களையும் பதிவு செய்யவேண்டியது வேட்பாளர்கள் கடமை.ஆனால்அதனை மறந்து தன்னுடைய இரண்டாம் மனைவி குறி்த்தும், அவரது சொத்துவிவரங்களையும் குமாரசாமி மறைத்து விட்டார் என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் "சிக்பள்ளாபுரா" தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் குமாரசாமி அவரது 2 ஆவது மனைவி பெயரில் உள்ள சொத்துகளை காட்டாமல் மறைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் சட்ட பிரிவு செயலாளர் சி.எம்.தனஞ்செய் ," தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொருவரும் வேட்புமனுவுடன் தங்கள் குடும்ப சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
அதன்படி சிக்பள்ளாபுரா தொகுதியில் மஜத வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது முதல் மனைவி அனிதா குமாரசாமி மற்றும் அவரது மகன் நிகில் கெளடாவின் பெயரில் உள்ள சொத்து விவரங்களை மனுவில் தெரிவித்துள்ளார்.
ஆனால் நடிகை குட்டி ராதிகாவை குமாரசாமி 2வது திருமணம் செய்துள்ளார். அவருக்கு ஒரு குழந்தை உள்ளது. இது ஊர், உலகத்துக்கே தெரியும். ஆனால் தனது வேட்புமனுவில் குட்டி ராதிகாவை 2வது திருமணம் செய்தது குறித்தோ, அவரிடம் உள்ள சொத்துகள் குறித்தோ எந்த தகவலையும் குமாரசாமி தெரிவிக்காமல் மறைத்துள்ளார்.
இது சட்டப்படி குற்றமாகும். ஆகவே மாநில தலைமை தேர்தல் அதிகாரி தானாக முன்வந்து குமாரசாமி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.