5 மாநில தலைவர்களை தூக்கியது காங்கிரஸ்.. புதுத் தலைவர்கள் நியமனம்!
டெல்லி: 5 மாநிலங்களின் தலைவர்களை தூக்கி விட்டு புதிய தலைவர்களை நியமித்துள்ளது காங்கிரஸ் மேலிடம்.
ராகுல் காந்திக்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் முக்கியப் பதவியைக் கொடுக்க கட்சி மேலிடம் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள செய்திகளின் பின்னணியில் இந்த புதிய தலைவர்கள் நியமனச் செய்தி வந்துள்ளது.
ராகுல் காந்தியின் முக்கிய ஆதரவாளரான அஜய் மேக்கன் டெல்லி பிரதேச காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அசோக் சவான் மகாராஷ்டிர தலைவராகியுள்ளார். குலாம் அகமது மிர் ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பரத்சிங் சோலங்கி குஜராத் தலைவராகியுள்ளார்.
தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவராக உத்தம் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரான சஞ்சய் நிருபம், மும்பை பிராந்திய காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை கட்சயின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி வெளியிட்டுள்ளார்.
இவர்கள் தவிர தெலுங்கானா மாநில செயல் தலைவராக மல்லு பாதி விர்கமர்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பரத் சிங் சோலங்கி,மறைந்த முன்னாள் முதல்வர் மாதவசிங் சோலங்கியின் மகன் ஆவார். இவர் 2வது முறையாக மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வருகிறார்.