டி.வி.யில் ஓயாம மோடி பேச்சையே காட்டுறாங்க: தேர்தல் ஆணையத்திடம் காங். புகார்
மும்பை: மராத்தி மொழி தொலைக்காட்சி சேனல்களில் மோடி அமெரிக்காவின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் பேசியதையே அடிக்கடி ஒளிபரப்புவதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலையொட்டி அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது அங்குள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் பேசியதை மராத்தி மொழி தொலைக்காட்சி சேனல்களில் அடிக்கடி ஒளிபரப்புகிறார்கள். இந்த ஒளிபரப்பு குறித்து பாஜகவும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்துள்ளது.
விளம்பரத்தில் மோடியின் புகைப்படமும், பாஜகவின் சின்னமான தாமரையும் உள்ளது. இந்நிலையில் மோடியின் உரையை அடிக்கடி ஒளிபரப்புவது குறித்து காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில்,
மோடி வெளிநாட்டுக்கு சென்றால் அவர் பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளராக அல்ல இந்தியாவின் 125 கோடி மக்களின் பிரதிநிதியாக தான் செல்கிறார். அவர் பாஜக சின்னத்தை விளம்பரத்தில் போட்டு வாக்கு கேட்பது சரி அல்ல. இது கண்டனத்திற்குரியது. பணம் கொடுத்து ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி குறித்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம் என்றார்.