பாஜக ஆட்சியமைத்த விவகாரம் : கர்நாடக ஆளுநருக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறையிட காங்கிரஸ் முடிவு
கர்நாடக ஆளுநருக்கு எதிராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் முறையிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
Recommended Video
டெல்லி : கர்நாடகாவில் பெரும்பான்மையில்லாத பாஜகவை ஆட்சியைமைக்க அழைத்த ஆளுநர் குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் முறையிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் கடந்த 15ம் தேதி வெளியானது. இதில் பாஜக 104, காங்கிரஸ் 78 மற்றும் மஜத கட்சி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. 222 தொகுதிகளுக்கு நடந்த தேர்தல் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை எந்தக் கட்சியும் பெறாததால், அங்கு ஆட்சி அமைப்பது யார் என்கிற குழப்பம் ஏற்பட்டது.
மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்த நிலையில், கர்நாடக மாநில ஆளுநர் வஜூபாய் வாலா பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தார். இதுகுறித்து காங்கிரஸ்-மஜத கட்சிகள் கூட்டாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தன.
இந்த வழக்கில் எடியூரப்பா ஆட்சி அமைக்க எந்தத் தடை விதிக்க முடியாது என்று சொன்ன நிலையில், நேற்று காலை எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். இன்று காங்கிரஸ் - மஜத கட்சிகள் தொடர்ந்த வழக்கு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், பெரும்பான்மை இல்லாத நிலையில் தனிப்பெரும் கட்சி என்பதற்காக பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை காரணம் காட்டி, கோவா, மேகாலயா, பீகார் ஆகிய மாநிலங்களிலும் தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு எதிர்க்கட்சிகள் போராட்டத்தை துவக்கியுள்ளன.
இதனால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் கர்நாடக மாநில ஆளுநர் குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.