வாரணாசியில் மோடியை எதிர்க்கும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் திட்டவட்டம்
டெல்லி: வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்க்கும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு இல்லை என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கடந்தாண்டு நடந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது ஆம் ஆத்மி கட்சி. ஆனால் ஒன்றரை மாதங்கள் மட்டுமே கடந்த நிலையில் ஜன்லோக்பால் மசோதாவிற்காக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
தற்போது ஆம் ஆத்மி கட்சி லோக்சபா தேர்தலை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறது. பாஜக வேட்பாளரும், குஜராத் முதல்வருமான மோடியையும், காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுலையும் தொடர்ந்து விமர்சித்து வரும் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப் படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதற்கிடையே, மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலும், குஜராத்தின் வதோதராவிலும் போட்டியிடுகிறார். மோடிக்கு எதிராக தொகுதி மக்களின் முடிவை கேட்டு வாரணாசி தொகுதியில் போட்டியிட தயார் என அறிவித்திருந்தார் கெஜ்ரிவால்.
எனவே, மோடி மற்றும் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் களமிறங்கப் போகும் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதாவது ‘வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லையே, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா? என அவர்கள் கேட்டதற்கு, ‘காங்கிரசில் வேட்பாளர்களுக்கு என்ன பஞ்சமா? காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் பெயரை உரிய நேரத்தில் அறிவிக்கும்.
வாரணாசி தொகுதிக்கு பல பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. காங்கிரஸ் வலுவான வேட்பாளரை களமிறக்கும். முழு வலிமையோடு அங்கு போட்டியிடுவோம். கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை. அவருக்கு ஆதரவு தர மாட்டோம். காங்கிரஸ் தனது சுய பலத்தில் போட்டியிடும். மோடிக்கு ஒரு கடினமான போட்டியை ஏற்படுத்துவோம்' என அவர் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications