புரளிகளை கிளப்பி நாட்டில் குழப்பம் உருவாக்க கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா-காங். திட்டம்: எம்.பி. பகீர்
பண பற்றாக்குறை பற்றி மக்களிடையே திடீர் என்று உருவான அச்சத்திற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று பாஜக எம்பி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்து இருக்கிறார்.
டெல்லி: பண பற்றாக்குறை பற்றி மக்களிடையே திடீர் என்று உருவான அச்சத்திற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று பாஜக எம்பி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்து இருக்கிறார். கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் உதவியுடன் காங்கிரஸ் இந்த விஷயத்தை பேஸ்புக்கில் டிரெண்ட் செய்து இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக் மூலம் மக்களின் தகவலை திருடியதாக கூறப்படுகிறது. இதை வைத்து தேர்தல் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தியதாகவும் கூறப்பட்டது.
சில நாட்களுக்கு முன் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவிற்கும் பாஜக கட்சியினருக்கும் தொடர்பு இருக்கிறது என்று தகவல் வெளியானது. அதே சமயம் இதில் காங்கிரஸ் கட்சி மீதும் பாஜக குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.
பணம் இல்லை
கடந்த சில நாட்களாக மீண்டும் ஏடிஎம்களில் பணம் இல்லை என்ற பிரச்சனை உருவாகி இருக்கிறது. இந்தியா முழுக்க இந்த பிரச்சனை திடீர் என்று உருவானது. முக்கியமாக 2000 ரூபாய் நோட்டுகள் யாருக்கும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இதனால் 2000 நோட்டுகள் திரும்ப பெறப்பட போகிறார்களோ என்ற அச்சம் நிலவியது.
காங்கிரஸ்தான் இப்படி செய்கிறது
இந்த பிரச்சனையை உருவாக்கியதே காங்கிரஸ் கட்சிதான் என்று பாஜக எம்பி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்து இருக்கிறார். டிவிட்டரில், பேஸ்புக்கில் இதுகுறித்து அதிகம் பேசியது காங்கிரஸ் கட்சியினர்தான் என்று கூறியுள்ளார். பண பிரச்சனை இல்லை என்று நிதித்துறை அமைச்சர் சொன்ன பின்பும் கூட வீணாக புரளி கிளப்பியது இந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்தான் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
பின்புலம்
மேலும் இதற்கு பின் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் இருப்பதாகவும் கூறியுள்ளார். அவர்களின் உதவியுடன்தான் இந்த பண பிரச்சனையை தேவையில்லாமல் காங்கிரஸ் டிரெண்ட் ஆக்கியது என்று குறிப்பிட்டுள்ளார். கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் இருக்கிறது என்று அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
கர்நாடக தேர்தல்
மேலும் இது கர்நாடக தேர்தலுக்காக செய்யப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். அதன்படி கர்நாடக தேர்தலில் பாஜகவில் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் இப்படி மோசமான ஒரு விஷயத்தை செய்து இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். கர்நாடகாவில் மக்கள் மத்தியில் பணமதிப்பிழப்பு குறித்து பயத்தை உருவாக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது என்று ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்து இருக்கிறார்.