குஜராத் தேர்தல்.. காங்கிரஸ் ஸ்டார் பேச்சாளர்கள் லிஸ்ட் வெளியீடு.. பட்டியலில் சோனியா, ராகுல் சேர்ப்பு
காந்திநகர்: எதிர்வரும் குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யவுள்ள காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
குஜராத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில், தனது நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியைல வெளியிட்டு காங்கிரஸ் முழுவீச்சில் களத்தில் இறங்கியுள்ளது.
காங்கிரஸின் இந்த நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இந்தியா முழுவதும் உள்ள அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.

வாழ்வா - சாவா தேர்தல்..
குஜராத் சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி நெருங்க நெருங்க, குஜராத் மாநில அரசியல் கட்சிகளுக்கு பிபி எகிறி வருகிறது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுவதால் இந்த முறை எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. அதே சமயத்தில், இந்த முறை கோட்டைவிட்டு விட்டால் இனி பல யுகங்களுக்கு குஜராத் ஆட்சிக்கட்டிலை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்கிற பயம் காங்கிரஸுக்கு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், குஜராத் தேர்தலில் தோல்வி அடைந்தால் அது மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதும் காங்கிரஸுக்கு தெரியும். எனவே, இந்த தடவை எப்பாடு பட்டாவது குஜராத்தில் அரியணையை பிடித்துவிட அக்கட்சி தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதன்படி பார்த்தால், குஜராத் தேர்தல் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் ஒரு வாழ்வா - சாவா தேர்தல் என்றுதான் சொல்ல வேண்டும்.

பட்டையை கிளப்பும் ஆம் ஆத்மி..
குஜராத்தில் பாஜகவும், காங்கிரஸும் தான் நேரடியாக மோதும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், திடீரென களம்புகுந்து பட்டையை கிளப்பி வருகிறது அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி. குஜராத்தின் கள நிலவரத்தை புரிந்துகொண்டு, இந்துத்துவா அரசியலையும், ஜாதி அரசியலையும் கையில் எடுத்துள்ள ஆம் ஆத்மிக்கு குஜராத் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது. இதனால் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸை இந்த முறை ஆம் ஆத்மிக்கு சற்று பின்னுக்கு தள்ளிவிட்டதாகவே கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் குஜராத்தில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸுக்கு இடையே கடுமையான பலப்பரீட்சை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சூடுபிடித்த பிரச்சாரக் களம்..
தேர்தல் தேதி நெருங்குவதால் குஜராத் பிரச்சாரக் களம் சூடுபிடித்து வருகிறது. குஜராத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் ஏற்கனவே அங்கு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல, ஆம் ஆத்மி சார்பிலும் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் சார்பில் குஜராத் தலைவர்கள் மட்டுமே பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தேசியத் தலைவர்கள் யாரையும் களத்தில் பார்க்க முடியாமல் இருந்தது. முக்கியமாக, பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றிருப்பதால் ராகுல் காந்தி இதுவரை குஜராத்தில் பிரச்சாரம் செய்யவில்லை.

நட்சத்திரப் பேச்சாளர்கள்..
இந்நிலையில், குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கவுள்ள தனது நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களைத் தவிர, கேரளா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் ஹரி பிரசாத், முன்னாள் ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் உட்பட 40 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications