தாமரை சின்னத்தை காண்பித்த விவகாரம்.. மோடியை கைது செய்ய காங், ஐ.ஜனதா தளம் வலியுறுத்தல்!
டெல்லி: லோக்சபா தேர்தலில் வாக்களித்த பின்னர் கையில் தாமரை சின்னத்துடன் போட்டோ எடுத்துக் கொண்ட நரேந்திர மோடியை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் புதன்கிழமையன்று பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாக்களித்தார். அவர் வாக்களித்த பின்னர் தமது கையில் தாமரை சின்னத்தை இணைத்துக் கொண்டு போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதே போல தாமரை சின்னத்தை ஏந்தியபடியே செய்தியாளர்களுக்கும் பேட்டியளித்தார்.

மோடியின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மோடி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனால் மோடி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் மோடியை கைது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது காங்கிரஸ். அக்கட்சியின் சட்டப் பிரிவு தலைவர் கே.சி. மிட்டல் கூறுகையில், தேர்தல் ஆணையம் மோடி மீதான புகாரை ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்றார்.
இதேபோல் மக்கள் பிரதிநித்துவ சட்டத்தை மீறிய நரேந்திர மோடியை உடனே கைது செய்ய வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளமும் கோரியுள்ளது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் சம்பத்துக்கு ஐக்கிய ஜனதா தளத்தின் பொதுச்செயலர் தியாகி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இந்திய ஜனநாயக வரலாற்றில் இதுவரை ஒரு பிரதமர் வேட்பாளர் என்பவர் இப்படி பகிரங்கமாக தேர்தல் விதிமுறைகளை மீறியது கிடையாது. ஆனால் அவர் மீது வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மோடி போட்டியிடும் இரு தொகுதிகளிலும் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவரை உடனே கைது செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் தேர்தல் நடைமுறைகளை மதவாதமாக்குவோருக்கு தக்க பாடம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications