"அக்னி வீரராக" தேர்வாகாத இளைஞர் தற்கொலை.. வேலையில்லா திண்டாட்டம் உச்சம்- கார்கே காட்டம்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் 'அக்னிபாத்' திட்டத்தின் கீழ் அக்னி வீரராக தேர்வாகவில்லை என தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து அரசியல் தலைவர்கள் பலர் வருத்தம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே ராணுவத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்தும், வேலையில்லா திண்டாட்டம் குறித்தும் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், பாஜக அரசின் கொள்கைகள் இளைஞர்களின் எதிர்காலத்தையும், தேசத்தின் பாதுகாப்பையும் சீரழித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
திண்பண்ட தீண்டாமை.. “கிரிக்கெட்” முதல் “அக்னிபாத்” வரை! “அசுரன்” படத்தை மிஞ்சும் “சாதிவெறி” பின்னணி
தற்கொலை
உத்தரகாண்ட் மாநிலத்தின் பாகேஷ்வர் மாவட்டத்தை சேர்ந்தவர் 20 வயதான கமலேஷ் கோஸ்வாமி. இவர் கடந்த சில மாதங்களாக ராணுவத்தில் சேர்வதற்காக பயிற்சி பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில்தான் 'அக்னிபாத்' திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் 'அக்னி வீரராக' தேர்வாக வேண்டும் என முயற்சித்துள்ளார். ஆனால் தேர்வில் அவர் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. இத்தனைக்கும் அவர் NCC C சான்றிதழ் வைத்திருந்திருக்கிறார். எனவே மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
காலிப்பணியிடங்கள்
தற்கொலைக்கு முன்னர் உருக்கமாக வீடியோவையும் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள மல்லிகர்ஜூன கார்கே, அக்னிபாத் திட்டம் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். அதாவது, "நாடு முழுவதும் ராணுவம் மற்றும் இதர பாதுகாப்புத் துறையில் 2 லட்சம் காலிப் பணியிடங்கள் இருக்கின்ற. ஆனால் 40 ஆயிரம் பேர் மட்டுமே தேவையென ராணுவம் அறிவித்துள்ளது.
தேசத்தின் எதிர்காலம்
இதற்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும் 35 லட்சம் பேர். இந்த போட்டியில் தான் தேர்வாகாததால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது வேதனையளிக்கிறது. பாஜக அரசின் கொள்கைகள் இளைஞர்களின் எதிர்காலத்தையும், தேசத்தின் பாதுகாப்பையும் சீரழித்து வருகிறது" என்று கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவும் சீனாவும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் சுதந்திரம் அடைந்தாலும், சீனாவின் வளர்ச்சி பிரமிக்க வைத்திருப்பதாக பொருளாதார அறிஞர்கள் கூறியுள்ளனர்.
வேலையின்மை விகிதம்
வேலையின்மை குறித்து 'இந்திய பொருளாதார கணிப்பு மையம்' (CMIE) சமீபத்தில் வெளியிட்டிருந்த புள்ளி விவரம் நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதை உறுதி செய்துள்ளது. அதாவது கடந்த செப்டம்பர் மாதம் 6.43 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம், அக்டோபர் மாதம் 7.77 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக பாஜக ஆளும் ஹரியானாவில் 31.8 சதவிகிதமும் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் 30.7 சதவிகிதமும் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல கிராமப்புறங்களில் கடந்த செப்டம்பர் மாதம் 5.84 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம், செப்டம்பர் மாதம் 8.04 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.